scorecardresearch

நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல்; இ.பி.எஸ் சூசகம்

அ.தி.மு.க.,வை யாராலும் தொட்டுக்கூட பார்க்கமுடியாது. அ.தி.மு.க.வை யார் சீண்டினாலும் அவர்கள் தான் அழிந்து போவார்கள் – எடப்பாடி பழனிச்சாமி

eps
எடப்பாடி பழனிச்சாமி

அ.தி.மு.க.வை யார் சீண்டினாலும் அழிந்து போவார்கள் என்றும், நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் வரலாம் என்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னையில் இருந்து சேலம் செல்லும் வழியில் விழுப்புரத்தில் சி.வி சண்முகம் தலைமையில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.

இதையும் படியுங்கள்: அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க இல்லை என நான் கூறவில்லை – அண்ணாமலை

இ.பி.எஸ் பேசியதாவது, “எம்.ஜி.ஆர் மறைவிற்கு பிறகு ஜெயலலிதா தமிழக வரலாற்றில் ஒரு எடுத்துக்காட்டாக விளங்கினார். இருபெரும் தலைவர்கள் அ.தி.முக பொதுச்செயலாளர் பொறுப்பை எனக்கு வழங்கியுள்ளீர்கள். அ.தி.மு.க.,வை அழிக்க வேண்டும், முடக்க வேண்டும் என நமது எதிரியான தி.மு.க செய்த எத்தனையோ சூழ்ச்சிகளை முறியடித்து தொண்டர்களின் ஆதரவோடு தி.மு.க.,வை வீழ்த்தும் மகத்தான பணியை எனக்கு வழங்கியுள்ளீர்கள்.

அ.தி.மு.க தொண்டர்களால் உருவாக்கப்பட்ட கட்சி. தொண்டர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக செயல்படுவேன். தொண்டர்களில் ஒருவராக இருந்து தொண்டர்களின் எண்ணத்தை நிறைவேற்றுவேன். அ.தி.மு.க.,வை முடக்க வேண்டும் என்பதற்காக நம்மோடு இருந்து பிரிந்து தி.மு.க.,வுடன் சேர்ந்து தி.மு.க.,வின் பி டீமாக செயல்படுகிறார்கள். அவர்களையெல்லாம் நீதிமன்றத்தின் மூலமாக, சட்டத்தின் மூலமாக வென்று எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கனவை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து நிறைவேற்றுவோம்.

தி.மு.க. ஆட்சியில் அ.தி.மு.க.வினர் மீது பொய் வழக்கு போடப்பட்டு வருகிறது. அவைகளை எல்லாம் சட்ட ரீதியாக நாம் எதிர்கொள்வோம். அ.தி.மு.க. பல்வேறு சோதனைகளை கடந்து வெற்றிப் பாதையில் பயணித்த ஒரு மாபெரும் கட்சி. எத்தனை சோதனைகள் வந்தாலும் அதை வென்றெடுப்போம்.

ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அ.தி.மு.க. மக்கள் பணியில் தொடர்ந்து இருக்கும். எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு வாரிசுகள் இல்லை. தொண்டர்களை தான் வாரிசாக பார்த்தார்கள். அ.தி.மு.க.,வை யாராலும் தொட்டுக்கூட பார்க்கமுடியாது. அ.தி.மு.க.வை யார் சீண்டினாலும் அவர்கள் தான் அழிந்து போவார்கள். அ.தி.மு.க.வை அழிக்க பார்த்தால் அது கானல் நீராகத்தான் இருக்கும்.

அ.தி.மு.க. மீண்டும் ஆட்சியில் அமரும். வருகிற பாராளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தல் வந்தாலும் வரலாம். அதுதான் ஒரே நாடு ஒரே தேர்தல் வரலாம். அ.தி.மு.க.விற்கு விடிவு காலம் பிறக்கும். ஒளிமயமான எதிர்காலம் நம் கண்ணுக்கு முன்னால் தெரிகிறது. மீண்டும் அ.தி.மு.க ஆட்சி அமைய பாடுபடுவோம்.” இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Eps says parliament and assembly elections may come together

Best of Express