திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்த காங்கிரஸின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், 'கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது' என்றார்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு நேற்று இரவு இரத்த அழுத்தம் குறைந்தது. இதனால், காவேரி மருத்துவமனையில் இருந்து உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு இரவு 1 மணியளவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மேலும் படிக்க: காவேரி மருத்துவமனையில் கருணாநிதி LIVE UPDATES
இந்நிலையில், இன்று அதிகாலை முதலே திமுக தொண்டர்களும், அரசியல் தலைவர்களும், குடும்பத்தினரும் காவேரி மருத்துவமனை முன்பு குவிந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், காங்கிரஸின் மூத்த தலைவர்களான குலாம்நபி ஆசாத் மற்றும் முகுல்வாஸ்ணிக் இருவரும், காவேரி மருத்துவமனைக்கு சென்று கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஸ்டாலினிடம் விசாரித்தனர். அதன்பின்பு மருத்துவர்களிடமும் கருணாநிதி உடல்நிலை பற்றி கேட்டறிந்தனர்.
அதன்பின்பு செய்தியார்களை சந்தித்த குலாம்நபி ஆசாத், "கருணாநிதியின் உடல்நிலை குறித்து சோனியா காந்தி, ராகுல் காந்தி கேட்டறிய சொன்னார்கள். அதற்காக இங்கு வந்துள்ளோம். தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள அவரை பார்க்க முடியாததால் அவரது குடும்பத்தினரை சந்தித்து நலம் விசாரித்தோம். சில நாட்களில் பூரண குணமடைந்து விரைவில் இயல்புநிலைக்கு திரும்புவார். அவரது உடல்நிலை சீராக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவின் சிறந்த மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்" என்று கூறினார்.