Ka. Anbazhagan : திராவிட முன்னேற்ற கழகத்தைத்தைப் பொறுத்தவரை, அறிஞர் அண்ணாவுக்கு அடுத்தபடியாக அக்கட்சியின் பொதுச்செயலாளராக இருந்து வருகிறார் க.அன்பழகன். 1962-ல் சட்ட மேலவை உறுப்பினராக சென்னை - செங்கல்பட்டு இடைத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய நாடாளுமன்றத்தில் மக்களவை உறுப்பினராக 1967 முதல் 1971 வரை பங்கு பெற்றவர். 1971-ல் சமூகநலத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். 1984 இல் இலங்கைவாழ் மக்களின் தமிழ் ஈழக்கோரிக்கையை வலியுறுத்தி தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை துறந்தவர்களில் இவரும் ஒருவர்.
1977 முதல் திமுக-வின் பொதுச் செயலாளராக இருந்து வரும் இவர், முன்னாள் முதல்வரும், திமுக-வின் முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதிக்கும், தற்போதைய தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் நெருக்கமானவர். அன்பழகனை திமுக-வினர் ’இனமான பேராசிரியர்’ என அன்புடன் அழைக்கிறார்கள். 15-க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
Advertisment
Advertisement
தற்போது 97 வயதாகும் க.அன்பழகன் மூச்சுத் திணறல் பிரச்னையால், கடந்த 24-ம் தேதி முதல் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டிருக்கும் அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்று, அன்பழகனின் உடல்நிலை குறித்து விசாரித்து வருகிறார் மு.க.ஸ்டாலின். அன்பழகனுக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டிருப்பதாகவும், புதன் கிழமை இரவு முதல் அவர் கண் திறக்கவில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் கோமா நிலைக்கு சென்று விட்டதாகவும், கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.