மெரினாவில் காட்டிய அக்கறையை ஸ்டெர்லைட் விவகாரத்தில் காட்டவில்லை முதல்வர் பழனிசாமி என்று திமுக எம்பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
கனிமொழி ட்விட்டர் :
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மே மாதம் நடந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டு அப்போது நடந்த தடியடி, துப்பாக்கி சூட்டில் 13 பேர் இறந்தனர். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு மே 28-ந்தேதி உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆலையில் நிர்வாக பணிகளை மட்டும் மேற்கொள்ள அனுமதி அளித்தது.
இந்த தீர்ப்பை விமர்சிக்கும் வகையில் திமுக எம்பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பது, “
“வேதாந்தா நிறுவனம், அதன் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையினை திறந்து நிர்வாக பணிகளை மேற்கொள்ளலாம் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மே 22 ஆம் தேதி அன்று 13 பேர் கொல்லப்பட்ட பிறகு, தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டது. வேதாந்தா இந்த தடையை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது.
இவ்வழக்கில் தமிழக அரசின் சார்பில், மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் ஆஜரானார். வேதாந்தா போன்ற பெரிய நிறுவனத்தை எதிர்த்து வழக்காடுகையில், முதல் நாளே போதுமான கலந்தாலோசனைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால், இதற்கான ஆலோசனை, வழக்கு 10.30-க்கு துவங்க இருந்த நிலையில், அரை மணி நேரம் முன்னதாக 10 மணிக்கு நடைபெற்றுள்ளது. ஏன் தாமதம் என்றால், சிஎஸ்.வைத்தியநாதன், மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் தரக் கூடாது என்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதாடிக் கொண்டிருந்தார்.
குடும்பம், பதவி, போட்டி: மு.க.ஸ்டாலினை சூழும் 5 சவால்கள் To Read, Click Here
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு இடம் தரக் கூடாது என்பதில் அத்தனை முனைப்பு காட்டிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அந்த அக்கறையை ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதில் காட்டியிருந்தால், இத்தோல்வி நிகழ்ந்திருக்காது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி,வரலாறு காணாத வகையில் தமிழகத்தின் நிர்வாகத்தின் தகுதியை குலைத்துக்கொண்டிருக்கிறார்” என கனிமொழி பதிவிட்டுள்ளார்.