scorecardresearch

கோவையில் டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு ரூ10 உயர்வு; அமலுக்கு வந்தது புதிய சட்டம்

மதுபான கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய் பெறப்படும். காலி மதுபான பாட்டில்களை மீண்டும் டாஸ்மாக் கடைகளில் ஒப்படைத்து 10 ரூபாய் பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் – கோவை ஆட்சியர்

tasmac bottle
கோவையில் டாஸ்மாக் மதுபானங்களுக்கு பாட்டிலுக்கு ரூ.10 விலை உயர்வு; சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கை

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் இன்று முதல் (ஏப்ரல் 1), ஒவ்வொரு பாட்டிலுக்கும் கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்க கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கூடுதலாக பாட்டிலுக்கு ரூ.10 வசூலிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம் நீலகிரி மாவட்டத்தில் வெற்றிகரமாக அமைந்ததையடுத்து, கோவை மாவட்டத்திலும் இன்று முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இனி காலி மது பாட்டிலை திரும்பப் பெறும் திட்டத்தைச் செயல்படுத்தும் விதமாக இன்று முதல் இந்த திட்டம் கோவையிலும் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: போக்குவரத்து காவலருக்கு ஏர்கூலர் வசதிகளுடன் நிழற்குடை; கோவை கமிஷனர் திறந்து வைப்பு

டாஸ்மாக் பாட்டிலில் ஒட்டுப்பட்டுள்ள ரூ.10 உயர்வுக்கான ஸ்டிக்கர்

தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை தமிழ்நாடு வாணிப கழகம் நடத்தி வருகிறது. இந்நிறுவனம் தமிழ்நாட்டில் மதுபானங்களை மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம் செய்யும் உரிமைத்தை பெற்றுள்ளது. தமிழ்நாடு அரசின் வருவாய் ஈட்டும் முக்கிய காரணியாக டாஸ்மாக் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திலும், திண்டுக்கல் மாவட்டத்திலும் ஊட்டி, கொடைக்கானல் என சுற்றுலா பயணிகள் பொது இடங்களில் வீசி விட்டும், உடைத்து விட்டும் போட்டுச் செல்கின்ற காலி மதுபான பாட்டில்களால் இயற்கை சூழலுக்கும் வனவிலங்குகளுக்கும் ஏற்படும் பாதிப்பை தடுக்கும் வகையில் சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் மதுபான பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை நடைமுறைபடுத்த உத்திரவிட்டது. இந்த திட்டம் நீலகிரியில் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டது. மேலும் இத்திட்டத்தை பிற மாவட்டங்களிலும் அமல்படுத்தவும் நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது.

விலை உயர்வு தொடர்பான அறிவிப்பு

இதனையடுத்து கோவை மாவட்டத்தில் காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை நாளை முதல் அமல்படுத்த இருப்பதாக கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், இன்று ஏப்ரல் 1-ம் தேதி முதல் மதுபான கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய் பெறப்படும் எனவும் இதற்கான ஸ்டிக்கர் மது பாட்டிலிலேயே ஒட்டப்பட்டு விற்பனை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலி மதுபான பாட்டில்களை மீண்டும் டாஸ்மாக் கடைகளில் ஒப்படைத்து 10 ரூபாய் பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுபான பாட்டில்களை, டாஸ்மாக் மதுபான கடைகளில் ஓப்படைத்து மாவட்டத்தின் வனப்பகுதிகளையும், விளைநிலங்களையும் பாதுகாக்க ஒத்துழைக்க வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி.ரஹ்மான், கோவை

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Kovai collector orders to increase rs 10 per tasmac bottle for environment safety