கோவை மாவட்டம் சூலூர் அடுத்த வாரப்பட்டி ஊராட்சி விவசாயிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் சார்பில் ராணுவ தொழில்நுட்ப பூங்கா தொழில் முனையம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதற்கட்ட போராட்டமாக இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்திருப்பதாக தெரிவித்தனர்.
இதையும் படியுங்கள்: கோவை அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு நேர்ந்த கதி: ஆட்சியரிடம் புகார்
வாரப்பட்டி கிராமத்தில் கந்தம்பாளையம், சடையன் செட்டிபாளையம், பூசாரிபாளையம், சுல்தான்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் 430 ஏக்கரில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் தொழில் முனையம் அமைய உள்ளதாக முதற்கட்ட செய்திகள் வெளிவந்துள்ளன.
இந்த கிராமத்தை சுற்றியுள்ள செலக்கரிச்சல் ஊராட்சி, கிருஷ்ணாபுரம் ஊராட்சி, புளியம்பட்டி ஊராட்சி ஆகிய கிராமங்களில் சுமார் 25 ஆயிரம் பேரும் வசித்து வருகின்றனர். குறைவான மழைப்பொழிவு காரணமாக காய்கறிகள், தென்னை சார்ந்த விவசாயம் செய்துவரும் விவசாயிகள், உபதொழிலான கோழி வளர்ப்பு மற்றும் பசுக்கள், ஆடுகள் உள்ளிட்டவற்றையும் இங்கு வளர்த்து வருகின்றனர்.
இப்பகுதியில் சுமார் 10 லட்சம் கோழிகள், ஆயிரம் ஆடுகள், 2 ஆயிரம் பசு மாடுகளையும் வளர்ந்து வருகின்றனர். எங்கள் கிராமத்தில் கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளில் கிடைக்கப்படும் நீரை குடிநீராக, விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு பயன்படுத்தியிருக்கிறோம். மேற்படி இடத்தில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் சார்பில் தொழில் முனையம் பௌண்டரிகள் மற்றும் கெமிக்கல் தயாரிப்பு நிறுவனங்கள் வர உள்ளதாக இருக்கிறதாம்.
மேற்கொண்ட ஆலைகள் அமைந்தால் வெளியேறும் கழிவுநீர் நிலத்தடி நீரில் கலந்து மாசு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் தொழில் தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் நச்சு புகையால் மக்களின் வாழ்வாதாரம் தொழில் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். ஏற்கனவே பெருந்துறை சிப்காட் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், எங்கள் பகுதியில் தமிழ்நாடு தொழில் முனையம் அமைய நிலம் கையகப்படுத்துவதாக மாவட்ட ஆட்சி அறிவித்திருக்கிறார். நிலம் எடுப்பதை தவிர்த்து விட்டு, தொழில் முனையத்தை தவிர்த்து எங்களின் வாழ்வாரத்தை பாதுகாக்க கேட்டுக்கொள்கிறோம் என மனுவில் தெரிவித்துள்ளனர்.
மேலும் முதல்வர் எங்கள் பகுதியில் நிலம் எடுக்கமாட்டோம் என வாக்குறுதி அளித்துள்ளார். ஆனால் இன்று அதிகாரிகள் அதற்கான முயற்சிகளில் ஈடுப்பட்டுள்ளனர் என பொதுமக்கள் பேட்டியில் தெரிவித்தனர்.
பி.ரஹ்மான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.