கோவையில் ஆன்லைன் மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள்
("Call Girls and call Boys available") என்ற விளம்பரம் மூலம் தமிழக இளைஞர்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்ட ஏழு பேரை கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் மும்பை சென்று அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் அவர்களின் வங்கி கணக்குகளை முடக்கி, தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
Advertisment
தமிழக இளைஞர்களை குறி வைத்து, தமிழகத்தைச் சேர்ந்த சைபர் கிரைம் குற்றவாளிகள் மும்பை சென்று கால் பாய்ஸ் மோசடியில் ஈடுபட்ட நிலையில், கோவை போலீசார் ஏழு பேரை கைது செய்துள்ளனர். லோகாண்டோ வலைத்தளம் மூலமாக ("Call Girls and call Boys available”) என்ற போலியான விளம்பரத்தை நம்பி சில இளைஞர்கள் லட்சக்கணக்கான பணங்களை இழந்துள்ளனர்.
இந்த நிலையில் கோவையைச் சேர்ந்த தியாகு என்பவர் தான் இந்த போலியான விளம்பரத்தை பார்த்து 7 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் ஏமாந்ததாக கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் உதவி ஆணையாளர் சரவணன் மேற்பார்வையில் ஆய்வாளர் அருண் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் சைபர் கிரைம் குற்றவாளிகள் தொடர்பு கொண்ட செல்போன் எண்களின் ஐ.பி முகவரி மற்றும் வங்கி கே.ஒய்.சி விவரங்கள் அடிப்படையில் குற்றவாளிகள் மும்பையில் பதுங்கி இருப்பதை அறிந்தனர்.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தனிப்படையினர் கர்ணன் 24, தமிழரசன் 23, மணிகண்டன் 22, ஜெயசூர்யா பாண்டியன் 25, விக்னேஷ் வீரமணி 25, அப்சல் ரகுமான் 24, பிரேம்குமார் 33 ஆகிய ஏழு பேரை கைது செய்துள்ளனர். மும்பையில் வைத்து கைது செய்யப்பட்ட ஏழு சைபர் கிரைம் குற்றவாளிகளில் ஐந்து பேர் பொள்ளாச்சியை சேர்ந்தவர்கள், ஒருவர் விழுப்புரம், மற்றொருவர் மும்பையைச் சேர்ந்தவர்.
கைது செய்தவர்களிடமிருந்து 36 சிம்கார்டு, 34 செல்போன், 15 வங்கி அட்டை மற்றும் ஏடிஎம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் வங்கிக் கணக்கில் இருந்த 8 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை பாதுகாப்பு தடுப்பில் வைத்துள்ளனர்.
மேலும் போலி வங்கி கணக்குகளை முடக்கியுள்ளனர். குற்றவாளிகள் கையில் இருந்த கார்டுகளின் அடிப்படையில் வங்கி நடவடிக்கைகளை கண்டறிந்து வருகிறோம். அதன் அடிப்படையில் மேலும் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது பின்னர் தெரிய வரும் என சைபர் கிரைம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கைது செய்த ஏழு பேரையும் மும்பையில் இருந்து கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்திற்கு தனிப்படை போலிசார் அழைத்து வந்தனர். இதைத்தொடர்ந்து சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சைபர் கிரைம் குற்றவாளிகளின் நடவடிக்கை தொடர்பாக சைபர் க்ரைம் உதவி ஆணையாளர் சரவணன் மற்றும் ஆய்வாளர் அருண் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த சந்திப்பில் உதவி ஆணையாளர் சரவணன் கூறியதாவது;
தியாகு என்பவர் கொடுத்த புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விளம்பரத்தை பார்த்து ஏமாந்து 3 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை பணம் கொடுத்துள்ளார். தியாகு மொத்தமாக ஏழு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மோசடியாளர்களால் மோசடிக்கு உள்ளானார். Kyc மூலம் அடையாளம் காணப்பட்டு மும்பையில் குற்றவாளிகளின் இடத்தை கண்டறிந்தோம். 34 செல்போன் 15 பேங்க் பாஸ்புக்கை பிடித்துள்ளோம்.
தமிழ்நாட்டைச் சார்ந்து இந்த மோசடி செய்வதால் குற்றவாளிகள் மும்பை சென்றால் பாதுகாப்பாக இருக்கும் என அங்கிருந்து இந்த சைபர் கிரைம் குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏழு பேரில் ஐந்து பேர் பொள்ளாச்சியை சேர்ந்தவர்கள், ஒருவர் விழுப்புரம், ஒருவர் மும்பையை சேர்ந்தவர்.
கோவை சைபர் க்ரைம் உதவி ஆணையாளர் சரவணன் மற்றும் ஆய்வாளர் அருண்
இவர்கள் அனைவருக்கும் வேறு ஏதும் வழக்குகள் இல்லை. இரண்டு வருடமாக இந்த சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இளைஞர்களிடம் ஆதார் அட்டைகளை வாங்கி பல மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் ஆதார் அட்டை மூலம் வங்கி நடவடிக்கைகள் மோசடிகளில் ஈடுபட்டனர். கே.ஒய்.சி தகவல், ஐ.பி முகவரி போன்றவற்றை வைத்து குற்றவாளிகள் இடத்தை கண்டறிந்தோம். பாதிக்கப்பட்டவர்கள் ஆன்லைன் மூலம் பணத்தை இழந்துள்ளனர். மோசடி மூலம் கிடைக்கும் பணத்தை கோவா போன்ற மாநிலங்களுக்கு சென்று கொண்டாடி செலவு செய்தனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பி.ரஹ்மான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil