Madurai extremists threat poonamallee court judge: பயங்கரவாதிகளான போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோர் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையின்போது நீதிபதிக்கே மிரட்டல் விடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2013ல் வேலுாரில் வெள்ளையப்பன், சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ், பரமக்குடியில் முருகன், டாக்டர் அரவிந்த் ரெட்டி என இந்து அமைப்பு மற்றும் பா.ஜ.க நிர்வாகிகள் கொலை செய்யப்பட்ட வழக்கில், மதுரையைச் சேர்ந்த போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இந்து அமைப்பு மற்றும் பா.ஜ.க நிர்வாகிகளை குறி வைத்து கொலை செய்து வந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்ததை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு விசாரணை சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்தநிலையில், இந்த வழக்குகளின் விசாரணை நேற்று முன்தினம் நீதிபதி இளவழகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோர் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் நீதிபதி விசாரணை நடத்தினார்.
அப்போது நீதிபதி ‘வழக்கை நடத்த வழக்கறிஞரை நீங்கள் நியமிக்கா விட்டால் நீதிமன்றமே வழக்கறிஞரை பணியமர்த்தும். அடுத்த வாய்தாவில் சாட்சிகளை விசாரிக்க தொடங்கி விடுவோம்’ எனக் கூறினார்.
இதையும் படியுங்கள்: பேருந்தில் பீர் குடித்த அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள்.. போலீசார் விசாரணை!
இதைக்கேட்ட பயங்கரவாதிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பிலால் மாலிக் ‘எங்கள் அனுமதியை பெறாமல் விருப்பம் இல்லாமல் நீங்களே வழக்கறிஞரை நியமித்துக் கொள்ளலாமா? அதற்கு சட்டத்தில் இடம் உள்ளதா? அப்படி இருந்தால் எங்களுக்கு எழுத்து வாயிலாக தெரியப்படுத்தவும்’ என்றார். அவரிடம் ‘உங்களுக்கு சட்டப்படி தெரிவிப்பேன்’ என நீதிபதி கூறினார். தொடர்ந்து மூவரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
அப்போது திடீரென பக்ருதீன் ‘எந்த போலீஸ்காரரும் எங்களை தொடக்கூடாது. நான் நீதிபதியிடம் பேச வேண்டும்’ என மிரட்டலாக கூறினார். ‘இந்த வழக்கை நடத்த மாட்டோம். நீங்கள் எங்களை துாக்கில் போடுவீர்கள். இல்லையென்றால் சுட்டு கொலை செய்வீர்கள்; உங்களால் வேறு என்ன செய்ய முடியும்’ என நீதிபதியிடம் மிரட்டும் தொனியில் சத்தமாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதேபோல பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோரும் ‘இழப்பதற்கு எங்களிடம் எதுவும் இல்லை. இப்போதே சாகத் தயார்; உங்களால் முடிந்ததை பாருங்கள்’ என பேசினர்.
அவர்களது நடவடிக்கையை போலீஸ்காரர் ஒருவர் ‘வீடியோ’ பதிவு செய்தார். அவரை அவர்கள் தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டினர். பின்னர் மூவரும் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
நீதிமன்ற வளாகத்திலே நீதிபதிக்கு மிரட்டல் விடுக்கும் வகையில், பயங்கரவாதிகள் பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil