கொரோனா காலத்தில் பொதுமக்கள் பலரும் தங்களால் இயன்ற உதவியை மற்றவர்களுக்கு செய்து வருகின்றனர். இதில் தென் தமிழக மக்களை அடித்துக் கொள்ள முடியாது என்று தான் நினைக்க தோன்றுகிறது. ஏற்கனவே சலூன் கடை வைத்திருக்கும் மோகன் என்பவர் தன்னுடைய மகளின் படிப்பு செலவிற்காக வைத்திருந்த ரூ. 5 லட்சத்தை கொரோனா காலத்தில் பசியால் வாடி வந்த ஏழை மக்களுக்கு கொடுத்து உதவினார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியை சேர்ந்த பூல்பாண்டியன் என்பவர் தென் மாவட்டங்களில் உள்ள ஆன்மீக தளங்களுக்கு சென்று யாசகம் செய்து வருகிறார். அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் பள்ளிகளின் வளர்ச்சிக்காக நிதி உதவி அளித்து வருகிறார் அவர். தற்போது கொரோனா ஊரடங்கின் போது மதுரையில் இருக்கும் அவர் தான் யாசகம் செய்து சேகரித்த பணத்தில் ரூ. 10 ஆயிரத்தை மே மாதத்தில் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்தார்.
பிறகு இரண்டு வாரங்களுக்கு முன்பு மீண்டும் ரூ. 10 ஆயிரத்தை சேகரித்து மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ளார். தற்போது மீண்டும் ரூ. 10 ஆயிரம் யாசகம் செய்து மதுரை மாவட்ட கொரோனா பணிக்காக நிதியாக கொடுத்துள்ளார். பெரிய அளவில் பேரிடர்கள் வரும் போது கை கொடுக்கும் சாமானிய மக்கள் தான் இன்றும் மனிதம் மீது நம்பிக்கையை தருகின்றார்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil