Mugilan CBCID arrest : Investigated and hospitalized in Stanley hospital : சமூக செயற்பாட்டாளர் முகிலன் பிப்ரவரி 15ம் தேதி எழும்பூர் ரயில்நிலையத்தில் இருந்து காணாமல் போனார். அதன்பின்பு கிட்டத்தட்ட 6 மாதங்கள் கழித்து 6ம் தேதி திருப்பதி ரயில் நிலையத்தில், ஒரு ரயிலுக்கு முன்பு அமர்ந்து தனி மனிதனாக தர்ணாவில் ஈடுபட்டிருந்தார். ஸ்டெர்லைட் ஆலை, கூடங்குளம் அணு மின்நிலையம், நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம் என்று தமிழகத்தில் மக்களுக்கு எதிராக செயல்படுத்தப்படும் திட்டங்களை தொடர்ந்து எதிர்த்து வந்தார் இவர். கைது செய்யப்படும் போதும் கூட ராஜூவ் காந்தி கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரின் விடுதலை குறித்து குரல் எழுப்பினார்.
Mugilan CBCID arrest : Investigated and hospitalized in Stanley hospital
அதன்பின்பு, அவரை ஆந்திர காவற்படை கைது செய்து, காட்பாடியில் தமிழக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் அவரை அழைத்துச் சென்றனர். அவரை காவல்துறையினர் எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் வைத்து பல மணி நேரம் விசாரணை நடத்தினர். அதன் பின்பு, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார். பரிசோதனை முடிந்த பின்பு ராயபுரத்தில் உள்ள எழும்பூர் குற்றவியல் பெருநகர இரண்டாவது நீதிமன்ற மாஜிஸ்திரேட் ரோஸ்லின் வீட்டில் நள்ளிரவு ஒரு மணியளவில் ஆஜர்படுத்தப்பட்டார்.
தனக்கு நெஞ்சுவலி ஏற்படுவதாக முகிலன் அங்கு குறிப்பிட ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய முகிலன் தான் கடத்தப்பட்டு, துன்புறுத்தப்பட்டதாகவும், ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட கூடாது என்று அவரை துன்புறுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார். சி.பி.சி.ஐ.டி வெளியிட்ட அறிக்கையின் படி, அவர் மீது குளித்தலையில் கொடுக்கப்பட்ட பாலியல் குற்றச்சாட்டினை வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது.