தி.மு.க. தலைவருர் மு.கருணாநிதியின் உடல்நிலை மோசமானதையடுத்து மீண்டும் காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். முதற்கட்ட சிகிச்சைக்குப் பிறகு கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று மருத்துவமனைக்கு சென்று, கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, சென்னை காவேரி மருத்துவமனைக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், நடிகர் சங்க தலைவர் நாசர், ஆடிட்டர் குருமூர்த்தி, நடிகர் பொன்வண்ணன் உள்ளிட்டோரும் வந்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தனர்.
அப்போது பேட்டியளித்த முத்தரசன், "கருணாநிதி உடல்நிலையில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஸ்டாலின் கூறினார். அவர் பூரணமாக குணமடைந்து வருவார் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.
மேலும் படிக்க - காவேரி மருத்துவமனையில் கருணாநிதி LIVE UPDATES
இதையடுத்து, பேட்டியளித்த ஆடிட்டர் குருமூர்த்தி, "தமிழகத்திற்கு கருணாநிதியின் தலைமை நீடிக்க வேண்டும். அரசியல் மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் தமிழகத்துக்கு பெருமை சேர்த்தவர் கருணாநிதி. கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அனைவரும் கருணாநிதியோடு நெருக்கமாக பழகி வந்தனர்" என்றார்.
தொடர்ந்து பேட்டியளித்த திண்டுக்கல் ஐ.லியோனி, "கருணாநிதி உடல்நலம் தேறி வருவதாக ஸ்டாலின், கனிமொழி தெரிவித்தனர்" என்றார்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் குணமடைந்து வருகிறார்" என்றார்.