பொள்ளாச்சி பாலியல் கொடூரம் விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில், அந்த விவகாரம் தொடர்பாக அதிமுகவில் இருந்து நாகராஜ் என்பவர் நீக்கப்பட்டுள்ளார்.
பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கு: அதிமுக.வில் இருந்து நீக்கப்பட்ட நாகராஜ்
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மாணவிகளிடம் பேஸ்புக் மூலம் நண்பர்களாக பழகி காதலிப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்து, அவர்களிடம் பணம் பறித்துள்ளனர். இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவங்களை வீடியோவும் எடுத்து உள்ளனர். இதில் சபரிராஜன், (வயது 25) திருநாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கோவையில் இந்த கும்பலிடம் சிக்கி பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் காவல் நிலையம் சென்ற பின்னர்தான் இவ்விவகாரம் தொடர்பான அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி வருகிறது.
மேலும் படிக்க - விஸ்வரூபம் எடுக்கும் பொள்ளாச்சி பாலியல் விவகாரம்! வேகமெடுக்கும் காவல்துறை விசாரணை!
கைது செய்யப்பட்ட நபர்களின் செல்போனில் இருந்து 40க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த கொடூரக் கும்பல் 200-க்கும் அதிகமான பெண்களை காதல் என்ற வலையை வீசி கொடூரமான முறையில் நடத்தியதும், வீடியோ எடுத்ததும் தெரியவந்தது.
நாகராஜ் அதிமுக.வில் இருந்து நீக்கம்
இதில், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசு திருப்பதி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். அவருக்கு அரசியல் பின்புலம் இருப்பதாகவும், சில அரசியல் பிரமுகர்களால் அவர் காப்பாற்ற முயற்சி செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், பிடிப்பட்ட நபர்களின் செல்போனில் இருந்ததாக அறியப்படும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் பெண்கள் மிரட்டப்படுவது போன்று காட்சிகள் இடம் பெற்று இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க - பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: குற்றவாளிகளுக்கு மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை!
இதற்கிடையில் புகார் கொடுத்த மாணவியின் அண்ணனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக செந்தில் (33), பாபு (26), ஆச்சிபட்டி வசந்தகுமார் (26), ஜோதி நகர் பார் நாகராஜ் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் நாகராஜ் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில், தற்போது நாகராஜை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி அதிமுக தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கட்சியின் கொள்கை - குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகத்திற்கு அவப்பெயர் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், நாகராஜ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.