சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு கடந்த நவம்பர் மாதம் பரிசோதனைக்காகச் சென்ற அதே பகுதியைச் சேர்ந்த 8 மாத கர்ப்பிணிப் பெண்ணை சோதித்த அரசு மருத்துவர்கள், அவருக்கு ரத்தக் குறைபாடு உள்ளதாக கண்டறிந்தனர். அவருக்கு ரத்தம் ஏற்றுவதற்காக சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் இருந்து ரத்தத்தை பெற்று அவருக்கு செலுத்தப்பட்டது.
சில நாட்கள் கழித்து அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால், மீண்டும் மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது, அந்தப் பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி தொற்று ஏற்பட்டுள்ளதைக் கண்டறிந்தனர். இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அவருக்கு கடந்த மாதம் செலுத்திய ரத்தத்தில் ஹெச்.ஐ.வி கிருமி இருந்தது தெரியவந்தது.
சிவகாசியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் அங்குள்ள அரசு மருத்துவமனையில் இருக்கும் ரத்த வங்கியில் ரத்த தானம் வழங்கியதும், அவரது ரத்தத்தைப் பரிசோதிக்காமல் அதை சேமித்து வைத்து கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஏற்றியதும் தெரியவந்தது.
யாரிடம் இருந்து ரத்தம் தானமாக பெற்றாலும், அதனை குறைந்தபட்சம் ஹெச்.ஐ.வி. ஹெபடிடிஸ் B, ஹெபடிடிஸ் c, சிபிலிஸ், மலேரியா ஆகிய ஐந்து சோதனைகளுக்கு உட்படுத்த வேண்டும். அதன்பிறகு, ரத்தத்தை வழங்கியவருக்கும் கவுன்சலிங் கொடுக்க வேண்டும். ஆனால், அரசு ஒப்பந்தம் பெற்று ரத்த வங்கி நடத்தி வந்த அந்த தனியார் நிறுவனம், ரத்தத்தில் ஹெச்.ஐ.வி. கிருமி இருக்கிறது என்பதை ரமேஷிடம் தெரிவிக்காமல் அவரையும் எச்சரிக்காமல் இருந்திருக்கின்றனர்.
இந்தநிலையில், கர்ப்பிணிப் பெண்ணுக்கும் அந்த ரத்தத்தை செலுத்த, அவரது குடும்பமுமே இடிந்து போயிருக்கிறது.
விசாரணையின் முடிவில், லேப் டெக்னீஷியன், ஆலோசகர், மெடிக்கல் அதிகாரி என மூன்று பேர் சஸ்பென்ட் செய்யப்பட்டு பின்பு பணியில் இருந்து நீக்கப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை சென்னையில் உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதுகுறித்து ஜன.3ம் தேதி தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க - கர்ப்பிணி வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த உயர்நீதிமன்றம்: ஜன.3க்குள் அறிக்கை அளிக்க அரசுக்கு உத்தரவு
இந்தச் சூழ்நிலையில், இவ்விவகாரம் பெரிதானதை அடுத்து ரத்த தானம் அளித்த ரமேஷ் குறித்து பெரிதாகப் பேசப்பட்டது. போலீஸார், மருத்துவ அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினார்கள். இதனால், கடும் மனஉளைச்சலில் அந்த இளைஞர் இருந்தார்.
இந்நிலையில் தன்னால் ஒரு கர்ப்பிணி பாதிக்கப்பட்டுவிட்டாரே என்று அறிந்த அந்த இளைஞர், மன உளைச்சலால் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து, அவர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரின் உடல் நிலை மோசமடைந்ததையடுத்து மதுரை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.