scorecardresearch

புதுச்சேரியில் அதிகரிக்கும் இன்புளூயன்சா வைரஸ் பரவல்; மார்ச்சில் இதுவரை 330 பேர் பாதிப்பு

ஐ.சி.எம்.ஆர் இன் அறிக்கை படி, மார்ச் இறுதியில் இன்புளூயன்சா வைரஸ் கிருமி தாக்குதல் படிப்படியாக குறைய தொடங்கும் என்று கூறப்படுகிறது

புதுச்சேரியில் அதிகரிக்கும் இன்புளூயன்சா வைரஸ் பரவல்; மார்ச்சில் இதுவரை 330 பேர் பாதிப்பு
இன்புளூயன்சா வைரஸ்

புதுச்சேரியில் அதிகரித்து வரும் வைரஸ் காய்ச்சல் காரணமாக மார்ச் தொடக்கம் முதல் இதுவரை சுமார் 330 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக, புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஜி ஸ்ரீராமுலு அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், புதுச்சேரியில் வைரஸ் காய்ச்சலால் மார்ச் மாதம் தொடக்கம் முதல் இதுவரை சுமார் 330 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அரசு மருத்துவமனைகளில் 12 பேர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: 2 பேரைக் கொன்ற இன்ஃப்ளூயன்ஸா வைரஸ், ஆலோசனை வழங்கும் மத்திய அரசு

கடந்த சில நாட்களாக வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வெளிநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த காய்ச்சல் குறித்து அச்சப்படத் தேவையில்லை எனவும், இணை நோய் உள்ளவர்கள் கவனமாக இருக்கவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பவர்கள் கூட்டம் அதிகம் நிறைந்த பகுதியில் செல்லும்போது முகக்கவசம் அணிந்து செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது இன்புளுயன்சா ஏ வைரஸின் துணை வைரசான இந்த வைரஸ் எச்3என்2 என அழைக்கப்படுகிறது. இந்த புதிய வகை வைரஸ் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோரை தான் அதிகம் தாக்கும் என்று கூறப்படுகிறது. இந்த வகை வைரஸ் தொற்றினால் இதுவரை இந்தியாவில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனைக் கண்டு புதுச்சேரி மக்கள் பீதி அடைய வேண்டாம். கடந்த மூன்று மாதங்களில் புதுச்சேரியில் 79 பேர் எச்3என்2 என்ற வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை புதுச்சேரியில் இத்தொற்றினால் உயிரிழப்பு ஏற்படவில்லை.

புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஜி ஸ்ரீராமுலு

புதுச்சேரியில், அனைத்து மருத்துவமனைகளிலும் காய்ச்சலுக்கு என்று பிரத்யேக புறநோய் சிகிச்சை பிரிவு நடத்தப்பட்டு வருகிறது. எவரேனும் காய்ச்சல் சளி, இருமல் தும்மல் போன்ற அறிகுறிகளோடு மருத்துவமனைக்கு வந்தால் அவர்களுக்கு எச்3என்2 வைரஸ்க்கான பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதன்மூலம் இவ்வகை வைரஸ் தொற்றை ஆரம்பத்திலேயே கண்டறிந்து இத்தொற்று பரவா வண்ணம் புதுச்சேரி சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. இந்நோய் தொற்றுக்கான சிகிச்சை புதுச்சேரியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார மையங்களிலும் மக்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் கிருமி பரவாமல் தடுக்க கைகளை சோப்பு மூலம் கழுவுதல், தொற்று அறிகுறி இருப்பவர்கள் முகக்கவசம் அணிவது, கூட்டமான  இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது, தும்மும் போதும், இரும்பும் போதும் வாய் மற்றும் மூக்கை மூடி கொள்வது போன்ற செயல்முறைகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக பின்பற்ற புதுச்சேரி மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் அதிக தண்ணீர் குடித்தல், கண்கள், மூக்கை தொடுவதை தவிர்த்தல், காய்ச்சல், உடல் வலி இருந்தால் பாரசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுதல் போன்ற அறிவுறுத்தல்களையும் பின்பற்ற வேண்டும். அதேபோல் கை குலுக்குதலை தவிர்த்தல், பொது இடங்களில் துப்புவதை தவிர்த்தல், மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் ஆன்டிபயாட்டிக் அல்லது பிற மருந்துகளை எடுத்துக் கொள்ளுதலை தவிர்த்தல் போன்ற செயல்களையும் பின்பற்றினால் இவ்வைரஸ் காய்ச்சல் பரவாமல் நம்மால் தடுக்க முடியும்.

ஐ.சி.எம்.ஆர் இன் அறிக்கை படி, இவ்வாண்டு மார்ச் இறுதியில் இந்த வைரஸ் கிருமி தாக்குதல் படிப்படியாக குறைய தொடங்கும் என்று கூறப்படுகிறது. ஆகவே புதுச்சேரி சுகாதாரத் துறையின் அறிவுறுத்தல்களை பின்பற்றி எச்3என்2 வைரஸ் பரவாமல் தடுக்க மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஜி ஸ்ரீராமுலு அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.

பாபு ராஜேந்திரன், புதுச்சேரி

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Puducherry health department alerts h3n2 influenza virus