ரஜினிகாந்துக்கும் அவரது ரசிகர்களுக்கும் இடையே மோதலை உருவாக்க திமுக பற்ற வைத்த பொறி இவ்வளவு வேகமாக பரவும் என ரஜினிகாந்தே எதிர்பார்க்கவில்லை. உடனடியாக ரீயாக்ஷன் கொடுத்து, ரசிகர்களின் ஆதங்கத்தை போக்கியிருக்கிறார் ரஜினிகாந்த்.
ரஜினிகாந்த் கடந்த 24-ம் தேதி ஒரு அறிக்கை விட்டார். ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த சிலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது தொடர்பான விளக்க அறிக்கை அது! ‘30 வருடங்கள் மன்றத்தில் பயணித்ததாலேயே அரசியல் தகுதி வந்துவிடாது. ரசிகர்கள் யாரையும் நான் பணம் செலவு செய்யக் கூறவில்லை. எனவே அதை ஒரு காரணமாக வைத்து பதவி எதிர்பார்க்கக்கூடாது’ என்கிற ரீதியில் போனது ரஜினி அறிக்கை!
Read More: என்னையும் உங்களையும் யாராலும், எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது...ரசிகர்களுக்கு ரஜினியின் புதிய அறிக்கை!
ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் இந்த அறிக்கை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மன்றத்தில் பயணித்தது தகுதி இல்லை என்றால், அரசியலுக்கு வேறு என்ன தகுதியை தலைவர் எதிர்பார்க்கிறார் என்கிற ரீதியில் ரசிகர்கள் புழுங்கத் தொடங்கினர். ரசிகர் மன்றத்திற்காக செலவு செய்தவர்களை கொச்சைப்படுத்தும் விதமாக தலைவர் அறிக்கை இருப்பதாகவும் அவர்கள் புலம்பினர்.
ரஜினிகாந்த் ரசிகர்களின் இந்த உள்ளக் கிடக்கையை துல்லியமாக நாடிப் பிடித்துப் பார்த்த திமுக, ரசிகர்களின் அந்த ஆதங்க தணலை ஊதி நெருப்பாக்கும் வேலையை தொடங்கியது. இன்று (அக்டோபர் 25) திமுக நாளேடான முரசொலியில் 3-ம் பக்கத்தில் மேல் பகுதி அரைபக்கம் முழுவதும் ரஜினிகாந்துக்காக ஒதுக்கப்பட்டது.
Read More: மற்றவர்கள் போல் அரசியல் செய்ய நான் ஏன் அரசியலுக்கு வர வேண்டும்? - ரஜினி ஆவேசம்
அதில் ரஜினிகாந்த் ஏற்கனவே அறிக்கையில் கூறப்பட்ட விவரங்களை ஒவ்வொரு பாயிண்டாக எடுத்துப் போட்டு, அது தொடர்பாக ரசிகர்களின் ஆதங்கத்தையும் வலுவாக பதிவு செய்தது முரசொலி. அதாவது, ரஜினிகாந்த் ரசிகர்களையே அவருக்கு எதிராக திருப்பும் வேலையை அந்தச் செய்தி மூலமாக திமுக கனகச்சிதமாக செய்தது. இந்தச் செய்தி ஏற்கனவே கனன்றுகொண்டிருந்த ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலைமையை உடனடியாக புரிந்து கொண்ட ரஜினிகாந்த் உடனடியாக இன்று தனது ரசிகர்களை பெருமைப்படுத்தும் விதமாக ஒரு அறிக்கையை விட்டார். ‘உங்களைப் போன்ற ரசிகர்களை பெற்றிருப்பது எனக்கு பெருமை’ என குறிப்பிட்டார். ‘கசப்பாக இருந்தாலும் நான் கூறிய சில உண்மைகளை புரிந்து கொண்டதற்கு நன்றி’ என ரசிகர்களின் மனக்காயங்களுக்கு மருந்து போடும் வேலையையும் தனது அறிக்கையின் மூலமாக செய்தார் ரஜினி.
ரஜினிகாந்த் ரசிகர்களை உசுப்பி விட்ட திமுக: முரசொலி செய்தி
கடுமையான மனப் புழுக்கத்தில் இருந்த ரஜினி ரசிகர்களை இந்த அறிக்கை ஓரளவு சாந்தப் படுத்தியிருப்பதாகவே கூற வேண்டும். கருணாநிதி இருந்தவரை, ரஜினிகாந்த் விவகாரத்தில் திமுக அடக்கியே வாசித்து வந்தது. தற்போது ரஜினிகாந்த் எப்படியும் திமுக.வுக்கு எதிராக தேர்தல் களத்திற்கு வருவார் என திமுக யூகித்துவிட்டது. அதன் எதிரொலிதான் ரஜினிக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து அட்டாக் செய்கிறது திமுக!
ரஜினிகாந்த் தனது இன்றைய விளக்க அறிக்கையில் திமுக.வை குறிப்பிடவில்லை என்றாலும், அவருக்கும் தெரிகிறது திமுக.வின் வியூகம்! அதனால்தான் உடனடி விளக்கம்! இதோடு, ஏற்கனவே நடவடிக்கைக்கு உள்ளான ரசிகர்களை மன்னித்து அமைப்பில் மீண்டும் சேர்க்கும் வேலையையும் ஜரூராக தொடங்கியிருக்கிறார் ரஜினிகாந்த்.
ரஜினிகாந்த் - திமுக யுத்தம் உருப்பெற ஆரம்பித்திருக்கிறது.