ரஜினிகாந்த் ஆதரவு: ரஜினிகாந்த் இன்று பல்வேறு அம்சங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். 8 வழிச்சாலை, செங்கோட்டையன் செயல்பாடு, ஒரே நேர தேர்தல் ஆகியவற்றை வரவேற்றார்.
ரஜினிகாந்த் சென்னையில் இன்று (ஜூலை 15) காலையில் செய்தியாளர்களை சந்தித்தார். முன்னதாக ஈரோடு கனிராவுத்தர்குளம், சி.எஸ்.நகர் பகுதியைச் சேர்ந்த பாட்சா – அப்ரோஸ் பேகம் தம்பதியின் இளைய மகன் முகமது யாசினை தனது இல்லத்திற்கு வரவழைத்து சந்தித்தார்.
ரஜினிகாந்த் தனது இல்லத்தில் முகம்மது யாசின் குடும்பத்தினரை அழைத்து சந்தித்தபோது!
முகமது யாசின் 2-ம் வகுப்பு மாணவன்! பள்ளியை ஒட்டிச் செல்லும் சாலையில் கிடந்த 50,000 ரூபாய் பணப்பையை வகுப்பாசிரியரிடம் கொண்டு சென்று கொடுத்தான். ஈரோடு மாவட்ட ரஜினி மன்றத்தினர், முகமது யாசினை சந்தித்து, ‘உனக்கு ஏதாவது உதவி வேண்டுமா?’ எனக் கேட்டார்கள்.
முகமது யாசின் அதற்கு, ‘எனக்கு உதவி வேண்டாம். ரஜினி அங்கிளை பார்க்க வேண்டும்’ என்றான். இந்தத் தகவல் ரஜினிகாந்திற்கு தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து முகமது யாசினை அழைத்து தங்கச் சங்கிலி பரிசளித்த ரஜினிகாந்த், என் மகனாக நினைத்து மேற்படிப்புகளை படிக்க வைக்கத் தயாராக இருப்பதாக கூறினார்.
ரஜினிகாந்த் ஆதரவு: சேலம்-சென்னை 8 வழிச்சாலை தேவை
இது தொடர்பாக முகமது யாசினுடன் நிருபர்களை சந்தித்து பேசினார் ரஜினிகாந்த். அப்போது நிருபர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். சேலம்-சென்னை 8 வழிச்சலை பற்றி எழுப்பிய கேள்விக்கு, ‘இது போன்ற திட்டங்கள் தேவை! நிலம் பாதிக்கப்படுகிறவர்களுக்கு அவர்கள் சந்தோஷப்படும் அளவுக்கு பணமோ அல்லது பதில் நிலமோ வழங்கப்பட வேண்டும். விவசாய நிலம் அதிகம் பாதிக்காத அளவுக்கு சாலை அமைந்தால் ரொம்ப சந்தோஷம்’ என்றார்.
'யாசின் இனி என்னுடைய மகன்'! - ரஜினிகாந்த் நெகிழ்ச்சி To Read, Click Here
தமிழ்நாட்டில் ஊழல் அதிகமாக இருப்பதாக அமித்ஷா கூறியது குறித்து கேட்டபோது, ‘அவருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் கூறியிருப்பார்’ என்றார் ரஜினி. தமிழக கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து கேட்டபோது, ‘எனக்கு தெரிந்தவரை அமைச்சர் செங்கோட்டையன் நல்ல முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்’ என்றார்.
மத்திய அரசின் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் குறித்து கேட்டபோது, ‘ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதன் மூலமாக நேர விரயம், பண விரயம் குறையும். அது வரவேற்கத் தக்கது’ என்றார் ரஜினிகாந்த். எப்போது கட்சி தொடங்கப் போகிறீர்கள்? 2019 தேர்தலில் போட்டியிடுவீர்களா? என்கிற கேள்விக்கு, ‘சரியான நேரத்தில் முடிவெடுப்போம்’ என்றார் ரஜினிகாந்த்.
ரஜினிகாந்த் ஒரே நேரத்தில் சேலம்-சென்னை 8 வழிச்சாலை, ஒரே நேர தேர்தல் ஆகியவற்றுக்கு ஆதரவு கொடுத்திருப்பது விவாதங்களை உருவாக்கியிருக்கிறது.