scorecardresearch

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 2 பணியாளர்கள் விஷ வாயு தாக்கி மரணம்; உழைப்பாளர் தினத்தில் நிகழ்ந்த சோகம்

சென்னை அருகே மீஞ்சூரில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த பணியாளர்கள் விஷ வாயுவை சுவாசித்தால் மரணம்; உழைப்பாளர் தினத்தில் 2 துப்புரவு பணியாளர்கள் உயிரிழந்த சோகம்

chennai
கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த பணியாளர்கள் விஷ வாயுவை சுவாசித்தால் மரணம் (பிரதிநிதித்துவ படம்)

சென்னையின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள மீஞ்சூர் பேரூராட்சி அருகே அத்திப்பட்டில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த துப்புரவுத் தொழிலாளர்கள் இருவர் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ‘டவுன் பஞ்சாயத்து ஊழியர் கோவிந்தன் (45), ஒப்பந்த தொழிலாளி சுப்புராயுலு (50) ஆகியோர் திங்கள்கிழமை மதியம் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கினர். தொட்டியை சுத்தம் செய்யும் போது, ​​விஷ வாயுவை சுவாசித்ததால், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சுகாதாரக் குழுவினர் இருவரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவர்களது உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்: கோவையில் சுற்றித்திரியும் குரங்குகள்: பொதுமக்கள் அச்சம்

இந்திய தண்டனைச் சட்டம் 304ஏ (அலட்சியத்தால் மரணம் விளைவித்தல்) மற்றும் 325 (தானாக முன்வந்து காயப்படுத்துதல்) மற்றும் கையால் துப்புரவு செய்பவர் பணியமர்த்தப்படுவதைத் தடை செய்தல் மற்றும் அவர்களின் மறுவாழ்வுச் சட்டம் ஆகியவற்றின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தனியார் பள்ளியின் தாளாளர் சிமியோன் விக்டரை கைது செய்துள்ளனர்.

தொழிலாளர்கள் தொட்டிக்குள் இறங்குவதற்கு முன்பு அவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார். சர்வதேச தொழிலாளர் தினம் அன்றும் பள்ளி தாளாளர், அந்த தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தினாரா என்பது குறித்து போலீசார் மேலும் விசாரித்து வருவதாகவும் அந்த அதிகாரி கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Sanitation workers asphyxiated death chennai international workers day