கோவை ரத்தினபுரி சாஸ்திரி வீதியில் இரண்டு வாரங்களுக்கு முன்பு (ஜூன் 17ம் தேதி) ஒரு தம்பதியினர் தள்ளுவண்டிக் கடையில் வியாபாரம் செய்து வந்தனர். குறிப்பிட்ட நேரத்தை தாண்டியும் அக்கடையை நடத்தியுள்ளனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் அந்த கடையை மூடச் சொல்லி உத்தரவு பிறப்பித்தனர்.
மேலும் படிக்க : ”குங்குமம் வைக்கல, வளையல் போடல” – விவாகரத்து கொடுத்துருங்க நீதிபதி
இதனை தொடர்ந்து இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த எஸ்.ஐ. செல்லமணி அவர்களை ஒருமையில் திட்டினார். இதனைத் தொடர்ந்து இதனை வீடியோ எடுத்த அவர்களுடைய 16 வயது மகனையும் திட்டி, அவர் கையில் இருந்த செல்போனையும் பிடிங்கியுள்ளனர்.
கோபமடைந்த சிறுவன், எஸ்.ஐ. செல்லமணி கிளம்பும் போது அவருடைய பைக் சாவியை பறித்தார். இதனால் ஆத்திரமடைந்த செல்லமணி கீழே இறங்கி அந்த சிறுவனை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும் அருகில் இருந்த மற்றொரு காவலர் அச்சிறுவனை லத்தியால் தாக்கினார். மகனை கைது செய்தும், இது தொடர்பாக சிறுவனின் தந்தை மீது வழக்கு பதிவு செய்தும் நடவடிக்கை மேற்கொண்டது காவல்துறை. ஆனால் காவல்துறையின் இந்த கண்மூடித்தனமான இந்த வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் பதில் அளிக்க வேண்டும் என்று மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இரண்டு வாரங்களுக்குள் தபால் மூலம் தவறாமல் பதில் அளிக்க வேண்டும் என்றும், இதில் தவறு ஏதும் நடந்தால் ஆணையம் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் அந்த அறிக்கையில் அறிவித்துள்ளது. நாளிதழ்களில் வெளியான செய்தியை அடிப்படையாகக் கொண்டு மாநில மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.