Stray dogs were poisoned to death near Coonoor : நீலகிரி மாவட்டத்தில் அமைந்திருக்கும் குன்னூர் பகுதியில் உள்ள ஓட்டுப்பட்டுரை அருகே தெரு நாய்களுக்கு விஷம் வைத்து கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரியின் குன்னூர், வசம்பள்ளம், வாசுகி நகர் கிராமங்களில் சேகரமாகும் குப்பைகள் அனைத்தும் இந்த குப்பைக் கிடங்கில் தான் கொட்டப்பட்டு வருகிறது.
Advertisment
இதில் இருக்கும் இறைச்சிக் கழிவுகள், காய்கறிகள் மற்றும் பழங்களை உண்பதற்காக வனவிலங்குகள், வளர்ப்பு பிராணிகள், தெரு நாய்கள், பறவைகள் இந்த பகுதியில் அதிகமாக சுற்றித் திரியும். ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் விலங்குகளுக்கு போதுமான உணவு கிடைக்கவில்லை. இதனால் அதிக நேரம் இந்த குப்பைக் கிடங்கில் விலங்குகள் சுற்றித் திரிந்திருக்கின்றன. இதை பிடிக்காத சிலர் கோழிக் கழிவில் விஷம் வைத்து சென்றுள்ளனர்.
கடந்த 6ம் தேதி காலை உணவைத் தேடிக் கொண்டு இந்த பகுதிக்கு வந்த விலங்குகள் அந்த இறைச்சிக் கழிவை தின்று மயங்கி விழுந்துள்ளன. நீலகிரி மண்டல கால்நடை இணை இயக்குநர் மற்றும் விலங்கு மருத்துவ குழுக்கள் அப்பகுதியை வந்தடைந்தனர்.
தண்ணீர் மற்றும் முதலுதவிகள் அளித்தும் பயனளிக்காமல் நாய்கள், பூனைகள், காட்டுப்பன்றிகள் அங்கேயே உயிரை விட்டன. நகர் பகுதிகளில் வசிக்கும் தெருவிலங்களுக்கு தேவையான உணவை தன்னார்வ நலனுடன் பலரும் அளித்து வருகின்ற நிலையில் விஷம் வைத்து தெரு நாய்கள் இங்கு கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”