Subashree death case IPC 308 slapped against AIADMK ex-Councillor : கடந்த வாரம் துரைப்பாக்கம் – பல்லாவரம் சாலையில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் மற்றும் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளருமான சி.ஜெயகோபால் தன் மகன் திருமணத்திற்கு வருகை தர இருக்கும் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தை வரவேற்று பேனர்களை வைத்திருந்தார்.
பள்ளிக்கரணை சாலையில் சென்று கொண்டிருந்த 23 வயது சுபஸ்ரீ மீது, ஒழுங்காக கட்டப்படாத பேனர் விழுந்தது. அந்த திடீர் சம்பவத்தால் நிலைத் தடுமாறி சாலையில் கீழே விழுந்தார். சுபஸ்ரீயைத் தொடர்ந்து பின்னால் வந்த லாரி, நொடிப்பொழுதில் சுபஸ்ரீ மீது ஏறியது. இதில் அந்த பெண், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த காட்சிகள் அனைத்தும் சிசிடிவியில் பதிவாகியிருந்தது.
ஏற்கனவே அந்த ஓட்டுநர் மற்றும் கவுன்சிலர் மீது வழக்குப் பதிவு செய்திருந்த நிலையில், அந்த கவுன்சிலர் மீது தற்போது ஐ.பி.சி. 308ன் கீழ் (ஐபிசி பிரிவு 308 – கொலையாகாத மரணம் விளைவிக்கும் குற்றத்தைச்செய்ய முயற்சித்தல்) வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மட்டும் அல்லாது அவருடைய மைத்துனர் மேகநாதன் மீதும் வழக்கு பதிவு செய்து காவல் துறை விசாரணை செய்து வருகிறது.
விசாரணை செய்து வரும் அதிகாரிகள் இது குறித்து தெரிவிக்கும் போது, சுபஸ்ரீ வழக்கில், சட்ட வல்லுநர்களின் ஆலோசனைப் பெற்று 308 தண்டனைப் பிரிவின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அபராதத்துடன் கூடிய அல்லது அபராதமற்ற 7 ஆண்டுகள் சிறை இவர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த வழக்கில் லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் மனோஜ் யாதவ் மீது ஐபிசி 304(ஏ) மற்றும் 279 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஜெயகோபால் மீது ஐபிசி 336ன் கீழ் மட்டுமே வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Subashree death case ipc 308 slapped against aiadmk ex councillor c jayagopal