Surjith Trichy Borewell Rescue Operation : மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள பிரிட்டோ என்பவரின் குழந்தை சுர்ஜித் விட்டு தோட்டத்தில் இருந்த ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தான். இதனைத் தொடர்ந்து தீயணைப்புத் துறையினர், மீட்புக் குழுவினகளின் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
குழந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்தது குறித்து தகவல் அறிந்தவுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நடுக்காட்டுப்பட்டிக்கு சென்று குழந்தையை மீட்கும் பணிகளை முடுக்கிவிட்டார். இவரையடுத்து அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், அமைச்சர் வளர்மதி ஆகியோர் அங்கே சென்று மீட்பு பணிகளைப் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினர்.
மீட்புப் பணி முயற்சிகள் எதுவுமே பலனளிக்காததால், ஆழ்துளை கிணற்றின் அருகில் பெரிய ஆழ்துளை கிணறு தோண்டி, குழந்தை இருக்கும் இடத்தை நெருங்கியதும், பக்கவாட்டில் சுரங்கம் தோண்டி குழந்தையை மீட்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, குழி தோண்டும் பணி தொடங்கப்பட்டது. ரிக் இயந்திரத்தின் மூலம் குழி தோண்டும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்றன. ஒரு ஆள் இறங்கும் அளவுக்கு ஒரு மீட்டர் அகலத்தில் இந்த குழி தோண்டப்பட்டு வருகிறது. ஆனால், கடினமாக பாறைப்பகுதியாக இருப்பதால், குழி தோண்டுவது கடும் சவாலாக இருந்தது.
அங்கிருக்கும் பாறையை உடைக்க இரண்டு ரிக் இயந்திரங்கள் முயற்சித்தும் முடியவில்லை. முடியவில்லை என்பதை காட்டிலும், ரிக் இயந்திரத்தின் ட்ரில் பிட், அதாவது பற்களே உடைந்து போய்விடுகின்றன.
எத்தனை முறை அதனை சரிசெய்து குழி தோண்டினாலும், பாறைகளை உடைக்கும் போது, அதன் பற்களே உடைந்தன. ஆகையால், ரிக் இயந்திரங்களுக்கு பதில், தற்போது போர்வெல் கொண்டு பாறையை துளையிடும் பணி தொடங்கியுள்ளது.
லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய பாறைகள்:
மணப்பாறை பகுதிகளில் இருக்கும் பாறைகள் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு உருவானவை என்று வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர். அதனால், தான் அவற்றை உடைக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளனர்.
1200 குதிரை திறன் கொண்ட போர்வெல்:
இந்நிலையில், 1200 குதிரை திறன் (Horse Power) கொண்ட போர்வெல் மூலம் பாறைகளை துளைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த 1200 HP திறன் கொண்ட போர்வெல், ஒரு மணி நேரத்தில் 100 அடி ஆழம் வரை தோண்டும் திறன் கொண்டதாகும்.
இது 6 இன்ச் சுற்றளவில் தான் வரை துளையிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 1 மீ சுற்றளவில் துளையிட்டால் மட்டுமே ஒரு ஆள் உள்ளே செல்ல முடியும் என்று வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
அதாவது, இந்த போர்வெல் மூலம், 6 இன்ச் சுற்றளவில் மூன்று குழிகள் போடப்படுகிறது. இதன் பிறகு, இரண்டாவது ரிக் இயந்திரம் கொண்டு, அந்த மூன்று துளைகளையும் ஒரே துளையாக மாற்றுவது என்பதே இப்போது செய்துகொண்டிருக்கும் பணியாகும்.
அதுமட்டுமின்றி, இந்த போர்வெல் மூலம் செங்குத்தாக 100 அடி ஆழத்திற்கு துளையிட்டால் கூட, அதன்பிறேகு பக்கவாட்டில் Horizontal-ஆக எப்படி துளையிட முடியும்? எப்படி அதனை செய்யப் போகிறார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
தவிர, 1200 திறன் கொண்ட போர்வெல் வெளியிடும் சப்தம் என்பது மிகவும் அதிகமாகவும் இருக்கும் என்றும், அந்த சப்தத்தை அந்த குழந்தை எப்படி தாங்கும் என்பதும் பெரும் வேதனை கொண்ட கேள்வியாகவே இருக்கின்றது.
இதைதவிர்த்து பார்க்கும் போது, இந்த போர்வெல் அட்வான்ஸ் மாடல் என்றும், இதன் செயல்பாட்டுக்கு ஒருவரே போதும் என்றும் டெக்னீஷியன்கள் தெரிவித்துள்ளனர். நட். போல்ட் போன்றவற்றை அதுவே தானாக மாற்றிக்கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதுவரை மொத்தமாக 48 அடி ஆழத்திற்கு மட்டுமே குழி தோண்டப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.