Tamil News Today news : சென்னையில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் இதுவரை 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். சென்னையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,009ஆக உயர்ந்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் மேலும் 103 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால், அம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,842ஆக உயர்ந்துள்ளது.
சாத்தான் குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர் முத்துராஜை ஜூலை 17 வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட முத்துராஜூக்கு நீதிமன்ற காவல்.
சாத்தான்குளம் காவல்நிலையத்தில் மாற்றுத்திறனாளியை தாக்கிய புகாரில் தூத்துக்குடி எஸ்.பி. பதிலளிக்க மாற்றுத்திறனாளிகள் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாற்றுத்திறனாளியை எஸ்.ஐ.க்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் தாக்கியதாக டிசம்பர் 3 இயக்கம் புகார் அளித்ததன் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அறந்தாங்கி அருகே பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்ட 7 வயது சிறுமியின் உடல் அவரது சொந்த ஊரில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது, உறவினர்கள், அதிகாரிகள் பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு, அஞ்சலி செலுத்தினர்.அதிமுக சார்பில் 3 லட்சம் நிதியுதவியும் வழங்கப்பட்டது.
அரசு பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்பு காலத்தை பணிக்காலமாக கருதி பதவி உயர்வு வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் இரவு நேரத்தில் பரவலாக மழை பெய்தது. கிண்டி, ஆலந்தூர், அடையார், திருவான்மியூர், தரமணி உள்ளிட்ட இடங்களில் விட்டுவிட்டு மழை பெய்தது. புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பம் சற்று தணிந்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
Tamil News Today : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மருத்துவர் சுகுமாரன் உயிரிழந்த அதிர்ச்சி செய்தி கேட்டு தாம் மிகவும் வேதனை அடைந்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சுகுமாரன் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஸ்டாலின், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்கள் ஒவ்வொருவரின் உயிரையும் பாதுகாத்திட உரிய மருத்துவப் பாதுகாப்பு உபகரணங்களை உடனடியாக வழங்கிட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.
Web Title: Tamil news today live news in tamil sathankulam cbcid corona death chennai lockdown
தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலத்தில், செய்தியாளர்களிடம் பேசிய சிபிசிஐடி ஐஜி சங்கர்: சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழப்பில் நடைபெற்று வரும் விசாரணை தொடர்பாக, இணையத்தில் பொய்யான செய்தி வெளியிட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். மேலும், பொய்யான செய்திகளை இணையத்தில் பகிர்ந்திருந்தால் உடனே நீக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
கொரோனா காரணமாக தள்ளிப்போகும் கல்லூரி செமஸ்டர் தேர்வை நடத்துவது குறித்து ஆராய உயர்கல்வித்துறை செயலர் தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
சாத்தான்குளம் சம்பவத்தில் கைதான 2 சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 5 போலீசாரும் பாதுகாப்புக் காரணங்களுக்காக பேரூரணி சிறையில் இருந்து மதுரை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
என்.எல்.சி தொடர் பாய்லர் விபத்து குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற தேசிய அனல் மின் நிலைய இயக்குனர் மொஹபத்ரா தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், என்.எல்.சி 4 அலகுகளிலும் பணி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் இன்று 1,842 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த என்ணிக்கை 66538 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் சென்னையில் மொத்த பலி எண்ணிக்கை 1,000ஐ தாண்டியுள்ளது.
தமிழகத்தில் இன்று புதிதாக 4,280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 7 ஆயிரத்து 1ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னைக்கு சில கட்டுப்பாடுகள், தளர்வுகள் அறிவிப்பு சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட உணவகங்களில் காலை 6 முதல் இரவு 9 மணி வரை பார்சல் வழங்க அனுமதி. ஷோரூம்கள், பெரிய கடைகள் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் மேலும் 7 நாட்களுக்கு முழுமுடக்கத்தை நீட்டித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஜூலை 6ஆம் தேதி முதல் ஜூலை 12ஆம் தேதி வரை மேலும் முழுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 6 முதல் 19 வரை கொல்கத்தாவில் இருந்து சில நகரங்களுக்கு பயணிகள் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை, மும்பை, புனே, நாக்பூர், அகமதாபாத், டெல்லிக்கு விமான சேவை ரத்து செய்யப்படுவதாக கொல்கத்தா விமான நிலைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழுமுடக்கம் என்பதால் பெட்ரோல் பங்குகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை சந்திக்கிறார் முதலமைச்சர். கொரோனா தடுப்பு பணி மற்றும் அண்மைக்கால நிகழ்வுகள் குறித்து இந்த சந்திப்பில் விளக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடக மாநிலத்தில் 10ஆம் வகுப்பு தேர்வை எழுதிய 33 மாணவர்களுக்கு கொரோனா. ஜூன் 25-ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது. தேர்வு எழுதிய மாணவர்களை பரிசோதனை செய்ததில் 33 மாணவர்களுக்கு கொரோனா உறுதியானது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 123 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,395 ஆக உயர்ந்துள்ளது. அங்கு மொத்த உயிரிழப்பு – 26, சிகிச்சை பெறுவோர்-1,444, குணமடைந்தோர்-925
மதுரையில் ஜூலை 6 முதல் 31ஆம் தேதி வரை உணவகங்களில் பார்சல் மட்டுமே வழங்கப்படும் என மதுரை மாவட்ட ஹோட்டல்கள் சங்கம் அறிவித்துள்ளது.
2019-20ஆம் ஆண்டுக்கான வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய நவம்பர் 30-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனை ஊழியர்களுக்கு தொடர்ந்து கொரோனோ பரவிய சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை வடபழனியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டது, மருத்துவமனையில் பணியாற்றும், மருத்துவர்கள், செவிலியர்கள் மருத்துவ பணியாளர்கள் என 40 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனோ பரவியதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனை மூடப்பட்டது .
ஊரடங்கு காலத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் எட்டு நீதிபதிகள், அவசர வழக்குகளை மட்டும் விசாரித்து வந்தது. இந்த நிலையில், ஜூலை 6 முதல் காணொலி மூலம், புதிய மற்றும் நிலுவை வழக்குகளை விசாரிக்க உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் செயல்பாடு குறித்து தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையில் நடைபெற்ற, அனைத்து நீதிபதிகள் ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
கொரோனாவால் உயிரிழந்த ராஜ் டிவி ஒளிப்பதிவாளர் வேல்முருகனுக்கு இன்று நினைவஞ்சலில் கூட்டம் நடைப்பெற்றது. சென்னை போட்கிளப்பில் உள்ள பத்திரிக்கையாளர் அலுவலகத்தில் வைக்கப்பட்ட வேல்முருகன் படத்திற்கு பத்திரிகையாளர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு முதல்வர் எடப்பாடி இன்று அடிக்கல் நாட்டினார். தலைமை செயலகத்தில் இருந்து காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார். இவருடன் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இருந்தனர். ரூ. 381.76 கோடி மதிப்பில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி கட்டப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனி மாத பௌர்ணமி இன்று தொடங்கி, நாளை காலை 11 மணிவரை உள்ளது, இந்த நிலையில் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை விதித்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உத்தரவிட்டுள்ளார். பொது வெளியில் மக்களின் நடவமாட்டத்தை குறைக்கும் வகையிலும்,சமூக பரவல் ஏற்பட்டு கொரோனா பரவாமல் தடுக்கும் வகையிலும் ஆனி பௌர்ணமி கிரிவலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சாத்தான்குளம் சம்பவத்தில் சிறையில் அடைக்கபட்டவர்களை அடுத்த வாரம் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இதுக்குறித்து சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. சங்கர் அளித்த பேட்டியில், ‘சம்பவத்தில் மேலும் யாருக்கும் தொடர்பு இருந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறியுள்ளார்.
கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் மனைவி ஜெயந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஜெயந்தி அனுமதிக்கப்பட்டுள்ளார். அதனைத்தொடர்ந்து, அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா இல்லை எனவும் பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.
கொரோனாவால் உயிரிழந்த மறைந்த திமுக எம்.எல்.ஏ ஜெ. அன்பழகன் உருவப்படம் அறிவாலயத்தில் இன்று திறக்கப்பட்டது. திமுக தலைவர் ஸ்டாலின் இந்த படத்தை திறந்து வைத்தார். இவருடன் இளைஞரணி கழக தலைவர் உதயநிதி மற்றும் கழக நிர்வாகிகள் இருந்தனர்.
சாத்தான்குளம் தந்தை மகன் கைதை நேரில் பார்த்த பொதுமக்களிடம் விசாரிக்க சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற அன்று சாத்தான்குளம் காவல்நிலைய பணியில் இருந்த பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி.போலீசார் முடிவு செய்துள்ளனர். வியாபாரிகள் ,பொதுமக்கள்,உறவினர்களுக்கு மெசேஜ் மூலம் தகவல் அனுப்பி சி.பி.சி.ஐ.டி அலுவலகத்திற்கு அழைத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விருதுநகர் மாவட்ட பொறுப்பாளராக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை நியமனம் செய்து அஇஅதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக அஇஅதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விருதுநகர் மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிற்கு ஒருவர் நியமனம் செய்யப்படும் வரை, மாவட்ட கட்சிப் பணிகளைக் கவனிக்க, பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாவட்டப் பொறுப்பாளராக நியமனம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.