New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/05/arrest-1-8-2.jpg)
Tamil News Updates
மரக்காணம் விஷச் சாராயம் குடித்து 14 பேர் பலியான விவகாரம்; 12 பேர் மீது சி.பி.சி.ஐ.டி போலீசார் கொலை வழக்குப்பதிவு
Tamil News Updates
மரக்காணம் அருகே விஷச் சாராயம் குடித்து 14 பேர் பலியான விவகாரத்தில் 12 பேர் மீது சி.பி.சி.ஐ.டி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார்குப்பம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூரில் கடந்த 13-ம் தேதி பலர் கள்ளச் சாராயம் அருந்தியுள்ளனர். கள்ளச் சாராயம் அருந்தியவர்களில் பலர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்தநிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிலர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர். மேலும், அடுத்தடுத்து உயிரிழப்பு ஏற்பட்டது. இந்த நிகழ்வு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படியுங்கள்: கள்ளச் சாராயம்; 23 பேர் இறந்தும் சரியான நடவடிக்கை இல்லை: ஆளுனரை சந்தித்த பிறகு இ.பி.எஸ் பேட்டி
இதனையடுத்து, முதல்வர் ஸ்டாலின் விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு சென்று, பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமும் அறிவித்தார். தொடர்ந்து இச்சம்பவம் காரணமாக சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் காவல்துறை உயர் அதிகாரிகள் சிலர் சஸ்பெண்ட், பணியிடை மாற்றம் செய்யப்பட்டனர். மேலும், வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டுள்ளது. தற்போது வரை மரக்காணம் பகுதியைச் சேர்ந்த 14 பேர் விஷச் சாராயம் அருந்தியதால் உயிரிழந்துள்ளனர்.
முன்னதாக, மரக்காணம் மற்றும் சித்தாமூரில் விற்கப்பட்டது கள்ளச் சாராயம் அல்ல என்றும், தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் மெத்தனால் சேர்க்கப்பட்ட விஷச் சாராயம் என்றும் காவல் துறை டி.ஜி.பி சைலேந்திர பாபு தெரிவித்தார். இதையடுத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
இந்தநிலையில், விஷச் சாராயம் குடித்து 14 பேர் பலியான விவகாரத்தில் 12 பேர் மீது சி.பி.சி.ஐ.டி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.