தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்து 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் திமுக அரசு தங்களது 2 ஆண்டுகளால ஆட்சியை நிறைவு செய்துள்ளது.
இந்த 2 ஆண்டுகள் சாதனையை விளக்கும் வகையில் அமைக்கப்பட்டு்ள்ள கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி என்ற சாதனை மலரையும் வெளியிட்டிருந்தார். மேலும் திமுக அரசின் 2 ஆண்டுகள் சாதனை குறித்து பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என்றுமு் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், தமிழகத்தில் திமுக அரசு 2 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்ததை தொடர்ந்து மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வின்போது உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு, பொன்முடி, டி.ஆர்.பாலு உள்ளிட்ட அமைச்சர்கள் உடன் இருந்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், இந்த ஆட்சி வாக்களித்தவர்கள் மட்டுமல்ல வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்துதான். இப்படிப்பட்ட ஆட்சிக்கு ஓட்டு போடவில்லையே என்று வருந்தும் அளவுக்கு ஆட்சி நடத்துவேன் என்று கூறியிருந்தேன். இரண்டு ஆண்டுகளாக இந்த ஆட்சிக்கு கொடுத்த ஒத்துழைப்பை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கொடுக்க வேண்டும். விமர்சனங்கள் குறித்து கவலையில்லை. நல்லவைகளை எடுத்துக்கொள்வேன். தீயவைகளை புறந்தள்ளுவேன் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“