தொழிற்சாலைகளில் 12 மணி நேர வேலை நேரத்தை அனுமதிக்கும் மசோதாவை தமிழ்நாடு வணிகர் சங்க கூட்டமைப்பு தலைவர் விக்கிரமராஜா வரவேற்றுள்ளார்.
தொழிற்சாலைகளுக்கு நெகிழ்வான வேலை நேரத்தை அனுமதிக்கும் தொழிற்சாலைகள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்ட மசோதாவை சமீபத்தில் தமிழ்நாடு சட்டசபை நிறைவேற்றியது. இதன்மூலம் தனியார் தொழிற்சாலைகளில் வேலை நேரம் ஒரு நாளைக்கு 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரம் ஆக உயர்த்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கு தி.மு.க கூட்டணி கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதையும் படியுங்கள்: ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் வருமான வரித் துறை சோதனை
இந்தநிலையில், காலம் மாறி வருவதால், இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்ற சட்டத் திருத்தத்தை வரவேற்பாக தமிழ்நாடு வணிகர் சங்க கூட்டமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கூறியுள்ளார்.
”தொழிலாளர் நெருக்கடி மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது. வட இந்தியாவிலிருந்து வரும் தொழிலாளர்கள் உள்ளூர் வேலைகளை கைப்பற்றுவதாக நமது மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் அவர்கள் ஒரு நாளைக்கு 15 மணி நேரம் வேலை செய்து அதற்கேற்ப ஊதியம் பெறுவதை நான் காண்கிறேன். இந்த மசோதாவுக்குப் பிறகு, தமிழகத் தொழிலாளர்கள் கூட 12 மணி நேர வேலைக்குச் சமமான சம்பளத்தைப் பெறுவார்கள்,” என விக்கிரமராஜா கூறியுள்ளார்.
மேலும், “மக்கள் 8 மணி நேரம் வேலை செய்கிறார்கள் என்பது தவறான கருத்து. எட்டு மணி நேரத்தில் அவர்களின் டிஃபன், தேநீர், மதிய உணவு மற்றும் காபி நேரம் ஆகியவை அடங்கும். உழைப்பின் சரியான நேரத்தை நாம் கணக்கிட வேண்டும் என்றால், அது மிகவும் குறைவாக இருக்கும். போட்டி நிறைந்த இந்த உலகில் இதுபோன்ற செயல்கள் தேவை” என்றும் அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil