தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து போலீஸ் உடையில் போலீஸை விமர்சித்து வீடியோ வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை நிலானி கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரபல தமிழ் சீரியல்களில் நடித்து வருபவர் நடிகை நிலானி. இவர் சமீபத்தில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து கடுமையான விமர்சனத்தை பதிவு செய்திருந்தார். போலீஸ் உடை அணிந்து நிலானி அந்த வீடியோவில் பேசியதாவது, “ “காக்கி சட்டை அணியவே கேவலமாக இருக்கிறது. அப்பாவி மக்களைக் கொன்றிருக்கிறார்கள். தமிழ் மக்களைத் தீவிரவாதிகளாக மாற்ற இந்த அரசும் போலீசாரும் முயற்சி செய்கின்றனர். இலங்கையில் என்ன நடந்ததோ அது தமிழ்நாட்டில் நடந்திருக்கிறது. இன்னொரு பாலசந்திரனையும், இசைப்பிரியாவையும் இழக்க வேண்டாம்” என்று கூறியிருந்தார்.
இன்னொரு பாலசந்திரனையும், இசைப்பிரியாவையும் இழக்க வேண்டாம்
இந்த பரபரப்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவியது. போலீசாரை வன்மையாகச் சாடியும் கண்டித்தும் பேசிய நிலானி மீது ரிஷி என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை வடபழனி காவல் நிலையத்தில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று நிலானி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குன்னூரில் தங்கியிருந்த நடிகை நிலானியை வடபழனி போலீஸார் கைது செய்தனர், பின்னர் அவர் சென்னை அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.