கடந்த இரண்டரை ஆண்டு காலமாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியை சு.திருநாவுக்கரசர் வகித்து வந்த நிலையில், கடந்த பிப்.2ம் தேதி இரவு திடீரென அவரது பதவி பறிக்கப்பட்டது. 'நாடாளுமன்ற தேர்தல் வரை நான் தான் தலைவர் பதவியில் இருப்பேன்' என்று சமீபத்தில் நடந்த கட்சிக் கூட்டத்தில் அவர் உறுதியாக தெரிவித்திருந்த நிலையில், திருநாவுக்கரசரின் பதவி பறிபோனது.
அவருக்குப் பதிலாக கே.எஸ். அழகிரி தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் செயல் தலைவர்களின் பதவிக்கும் புதிய ஆட்களாக எச்.வசந்தகுமார், கே.ஜெயகுமார், எம்.கே.விஷ்ணுபிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில், டெல்லி விரைந்த திருநாவுக்கரசர், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த திருநாவுக்கரசர், "ராகுல்தான் என்னை பாஜகவில் இருந்து காங்கிரஸில் இணைத்தார். தமிழகக் காங்கிரஸ் தலைவர் பதவியையும் அளித்தார். அவருக்கு நன்றித் தெரிவிப்பதற்காகவே சந்தித்தேன்.
ராகுல் காந்தி என் மீது எடுக்கும் முடிவுகளை அவர் மீது நான் கொண்ட பாசத்தால் மதித்து நடக்கிறேன். ராகுல் காந்தி எடுக்கும் முடிவுகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பேன். இதுபோல் சோனியா காந்தி மீதும் பாசமும், மரியாதையும் வைத்திருக்கிறேன்.
தமிழகத்திலும், புதுச்சேரியிலும் காங்கிரஸ் வெற்றிக்கு தொடர்ந்து பாடுபடுவேன். ராகுல் பிரதமராக மக்களவை தேர்தலில் பாடுபடுவேன். புதிதாக அமர்த்தப்பட்டுள்ள தலைவருக்கும், அவரது குழுவிற்கு எனது வாழ்த்துக்கள். ரஜினி எனது 40 வருட கால நண்பர், அவரை அமெரிக்காவில் நான் சந்தித்தகவில்லை.
நானும், ராகுல் காந்தியும் என்ன பேசிக்கொண்டோம் என்பதை சொல்ல வேண்டியதில்லை. கட்சிக்காக என்ன செய்ய வேண்டும். எப்படி செயல்பட வேண்டும் என எனக்கு வழிமுறைகளை சொல்லியிருக்கிறார்.
ராகுல் காந்தி என்ன கொடுத்தாலும் ஏற்றுக்கொண்டு பணியாற்றுவேன். சாதாரண தொண்டனாக 5 ரூபாய் உறுப்பினராக இருந்தும் பணியாற்றுவேன். அவர் என்ன வேலை கொடுத்தாலும் செய்வேன். நாங்கள்தான் திமுகவுடன் கூட்டணியில் இருக்கிறோம். 40 தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம்.
ராகுல்காந்தி இந்த இடத்தில் போட்டியிடுங்கள் என்று சொன்னால் போட்டியிடுவேன். போட்டியிட வேண்டாம் என்று சொன்னால் போட்டியிடமாட்டேன்" என்றார்.
மேலும் படிக்க: அதீத நம்பிக்கையில் வீழ்ந்த திருநாவுக்கரசர்: கே.எஸ்.அழகிரி வந்த முழுப் பின்னணி