Trichy 2 years old boy Sujith Wilson body recovered
Trichy 2 years old boy Sujith Wilson body recovered from bore well : 25ம் தேதி மாலை தன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது சிறுவன் சுஜித் 600 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் எதிர்பாராத வண்ணம் விழுந்துவிட்டான். ஆரம்பத்தில் 25 அடி ஆழத்தில் இருந்த குழந்தை பின்பு 88 அடியில் போய் சிக்கிக் கொண்டது. ஐந்து நாட்களாக மீட்புப் பணியில் தீயணைப்புத் துறையினர், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் உள்ளிட்டோர் தொடர் முயற்சியில் குழந்தையை காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆழ்துளைக் கிணற்றுக்கு பக்கவாட்டில் சுரங்கம் அமைத்து குழந்தையை மீட்பதாக திட்டம் போடப்பட்டது.
அதற்காக ரிக் இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு மூன்று மீட்டர் தொலைவில் துளையிடும் பணி தீபாவளி அன்று காலை (27/10/2019) துவங்கப்பட்டது. மண்ணில் பாறைகள் அதிகமாக இருந்த காரணத்தால் துளையிடும் பணி மிக மெதுவாகவே நடைபெற்றது. 25 அடி ஆழம் தோண்டப்பட்ட பின்பு, இரண்டாவது ரிக் இயந்திரம், குழந்தை ஆள்துளைக் கிணற்றில் விழுந்த நான்காவது நாள் கொண்டு வரப்பட்டது. அதன் மூலம் 10 அடிகளுக்கு மேல் கூட தோண்ட முடியவில்லை. பின்னர் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்ட கடினமான பாறைப்பகுதிகளை போர்வெல் இயந்திரம் மூலம் துளையிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 55 அடி ஆழம் வரை தோண்டிய பிறகு தீயணைப்புத்துறை காவலர் திலிப் குமார், ஆழத்தில் இருக்கும் ஆக்ஸிஜன் குறித்தும், வெட்டப்பட்ட பாறையின் தன்மை குறித்தும் அறிந்துவர உள்ளே இறக்கப்பட்டார்.
அவர் குறித்து வைத்த இடங்களில் மீண்டும் போர்வெல் இயந்திரத்தால் துளையிடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. இரவு 09:55 மணி அளவில் மற்றொரு தீயணைப்பு வீரர் அஜித் குமார் ஏணி மூலம் பள்ளத்திற்குள் இறங்கினார். அவர் பாறைகளை பெல்ட்டில் இணைக்க பின்பு அந்த பாறைகள் அனைத்தும் வெளியேற்றப்பட்டது.
ஆனால் ஆழ்துளைக் கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதைத் தொடர்ந்து குழந்தை உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. அதிகாலை 02:30 மணி அளவில் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் “நேற்று இரவு 10 மணியில் இருந்தே ஆழ்துளைக் கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது என்றும், மருத்துவக்குழுவை சோதனைக்காக அனுப்பியிருப்பதாகவும்” குறிப்பிட்டார். பிறகு குழந்தை இறந்துவிட்டதாகவும், அழுகி சிதிலமடைந்த நிலையில் இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
காலை 04:30 மணிக்கு ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிய சுஜித் சடலமாக மீட்கப்பட்டு வெளியில் கொண்டு வரப்பட்டார். மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு எடுத்தச் செல்லப்பட்ட அவர் உடல் பிரேத பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு பெற்றோர்களிடம் தரப்பட்டது. வெல்லமண்டி நடராஜன், விஜய பாஸ்கர் ஆகியோர் தங்களின் அஞ்சலிகளை செலுத்தினர். பாத்திமா நகர் கல்லறைத்தோட்டத்தில் இறுதி சடங்குகள் நடத்தப்பட்டு குழந்தை சுஜித் உடல் நல்லடக்கம் செய்யபட்டது.