திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய் சிங்கப்பூர் மலேசியா இலங்கை உள்ளிட்ட முக்கிய நாடுகளுக்கு தினசரி விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. விமானம் மூலம் வரும் பயணிகள் சட்ட விரோதமாக தங்கம் மற்றும் கரன்சி நோட்டுகளை கடத்தி வருவதும் அதை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது.
அந்தவகையில், திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு துபாயிலிருந்து வந்த விமானத்தில் வந்த பயணி மூன்று பேர் தங்கம் கடத்தி வருவதாக விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ரகசிய தகவலின் அடிப்படையில் விமான நிலையம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாக மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மற்றும் துபாயில் இருந்து வந்த பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர்.
இதையும் படியுங்கள்: மத்திய அரசு, நிதி அமைச்சகம் உயர் நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றுவதில்லை: நீதிபதிகள் காட்டம்
விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 2 ஆண் பயணிகள் மற்றும் 1 பெண் பயணி உடலில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட தங்கம் சிக்கியது. பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.72 லட்சத்து 73 ஆயிரத்து 781 மதிப்புள்ள 1 கிலோ 197.5 கிராம் மதிப்புள்ள ஆகும்.
இதனையடுத்து தங்கம் எடுத்து வந்த 3 பேரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தங்கம் கடத்தலில் மூன்று பேரும் இதற்கு முன்பு கடத்தலில் ஈடுபட்டுள்ளனரா? பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்கள் உண்மையானதா? வேறு வழக்குகள் அவர்கள் மீது உள்ளதா இவர்களுக்கு பின்புலமாக யார் செயல்படுகிறார்கள் எந்த நோக்கத்திற்காக தங்கங்களை சட்ட விரோதமாக கடத்திச் செல்கின்றனர் என பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் விசாரித்த பின்னர் 3 பேரையும் விமான நிலைய வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
சமீபகாலமாக திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் தங்கம் கடத்தல் வெளிநாட்டு கரன்சிகள் பறவைகள், உயிரினங்கள் கடத்தி வரும் சட்ட விரோதமான செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தொடர்ந்து தங்கம் மற்றும் கரன்சி நோட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தாலும் கடத்தலில் ஈடுபட்டு வருவோரின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகின்றது. எனவே, கடத்ததில் ஈடுபட்டு பிடிபடுபவரகள் மீது வருங்காலத்தில் விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil