திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கரட்டாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணி (35). இவருக்கு திருமணம் ஆகி சரண்யா (23) என்கிற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் இவரது உறவினர்களான எல்லம்மாள் (50), சுகன்யா(28), விஷ்ணு தேவ் (2) ஆகியோருடன் இன்று காலை திருச்சியில் உறவினர் பிறந்தநாள் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக ஒரே காரில் புறப்பட்டு சென்றுள்ளனர்.
புலிவலம் வனப்பகுதி வழியாக கார் சென்று கொண்டிருக்கும் பொழுது, சேலம் மாவட்டத்தை சார்ந்த சந்தான கிருஷ்ணன் (37) என்பவர் திருச்சி ஏர்போட்டில் பயணிகளை இறக்கி விட்டு, மீண்டும் சேலம் நோக்கி எதிர் திசையில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது எதிர்பாராத விதமாக இரண்டு கார்களும் நேருக்கு நேர், பயங்கரமாக மோதிக் கொண்டது.
இதையும் படியுங்கள்: திருச்சியில் போலீசாரை தாக்கிய ரவுடிகள் மீது துப்பாக்கிச் சூடு; என்கவுண்டர் மிஸ்ஸிங்
இதில் மணி மற்றும் இரண்டு வயது ஆண் குழந்தை விஷ்ணு தேவ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை அடுத்து 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த எல்லம்மாள், சரண்யா ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த புலிவலம் போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இதேபோன்று காளிப்பட்டி மேற்கு தெருவை சேர்ந்தவர் அம்மணி (65). இவர் இன்று காலை ரோட்டோரம் குப்பையை கொட்டி விட்டு, சாலையை கடக்க முயன்ற பொழுது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து துறையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துறையூர் பகுதியில் இன்று காலை நடந்த இரு வேறு விபத்துகளில் குழந்தை உட்பட மூன்று பேர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil