scorecardresearch

’வெளியே வாடா; காவல் துறையே வெளியே வாடா!’ ஆரணி போலீஸ் நிலையத்தை அதிர வைத்த வி.சி.க பேரணி

விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் பாஸ்கரன் காவல் துறைக்கு எதிராக குரல் எழுப்ப அவரது ஆதரவாளர்கள் சேர்ந்து கோஷமிட்டனர். ஆரணி நகர காவல்நிலையம் முன்பு கோஷம் எழுப்பியபடி ஊர்வலம் சென்றனர்

Pagalavan suspended from the Viduthalai siruthaigal party
ஆரணி காவல் நிலைய போலீசாருக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோஷங்களை எழுப்பினர்.

கைது செய்த காவல்துறையை விமர்சித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கோஷங்கள் எழுப்பியது ஆரணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி ஊராட்சியில், தான் வாடகைக்கு எடுத்துள்ள கடையை ஆக்கிரமித்ததாகக் கூறி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் பகலவன் என்கிற பாஸ்கரன், ஆரணி ஓன்றியச் செயலாளர் ரமேஷ் ஆகியோர் மீது சின்னக்கண்ணு என்பவர் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். புகாரை பெற்ற போலீசார் விசாரணைக்கு பலமுறை பகலவன் என்கிற பாஸ்கரனை அழைத்தும் வரவில்லை. நீண்ட வற்புறுத்தலுக்கு பின் விசாரணைக்கு வந்த பாஸ்கரன், என்னையே விசாரணைக்கு அழைப்பீர்களா என காவல்நிலையத்தில் இருந்த எஸ்.எஸ்.ஐ கிருஷ்ணமூர்த்தியை ஒருமையில் பேசி, அவரின் சாதி பெயரை கேட்டு மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

இதையும் படியுங்கள்: முதல்வர் மீது கை வைத்தால் வெட்டுவேன்: டி.ஆர். பாலு சர்ச்சை பேச்சு

இதனையடுத்து கடந்த ஜனவரி 8 ஆம் தேதி, அரசு அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்தது, கட்டடம் இடித்து ஆக்கிரமித்தது போன்ற குற்றச்சாட்டின் கீழ் பாஸ்கரன், ரமேஷ் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் செல்லும்போது காவல் வாகனத்தை முற்றுகையிட்டு அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். பின்னர், காவலர்கள் ஒருவழியாக அவர்களை நீதிபதி முன் நிறுத்தி நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.

சிறையிலிருந்த பாஸ்கரனுக்கு கடந்த ஜனவரி 26 ஆம் தேதி ஜாமீன் கிடைத்தது. இதனையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வேலூர் சிறையில் இருந்து வெளியே வந்த பாஸ்கரனுக்கு மாலை, மரியாதை செய்து காரில் அவரை ஊர்வலமாக அழைத்து வந்தனர். மேலும், ஆரணி நகரத்துக்குள் அனுமதி இல்லாமல் நூறுக்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டு ஊர்வலம் நடத்தினர்.

அப்போது மாவட்ட செயலாளர் பாஸ்கரன் காவல் துறைக்கு எதிராக குரல் எழுப்ப அவரது ஆதரவாளர்கள் சேர்ந்து கோஷமிட்டனர். வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்த ஆரணி நகர காவல்நிலையம் முன்பு ஊர்வலமாக வந்து அச்சறுத்தல் ஏற்படுத்தும் வகையில் கோஷம் எழுப்பியபடி ஊர்வலம் சென்றனர். ”காவல்துறையே, காவல்துறையே, வெளியே வாடா காவல்துறையே, தைரியம் இருந்தால் வெளியே வாடா!,” என்று போலீசாரை படுமோசமாக விமர்சிக்கும் வகையில் கோஷங்கள் எழுப்பினர். போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

காவல்துறையை மோசமாக விமர்சிக்கும் இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம், வடக்கு மண்டல காவல்துறை அதிகாரிகள் விசாரித்துள்ளனர்.

காவல்துறை அனுமதி இல்லாமல் ஊர்வலம் நடத்தியவர்கள், காவல்துறைக்கு எதிராக கோஷமிட்டவர்கள் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்கான சட்ட ஆலோசனையும் கேட்டுள்ளனர். ஜாமீனில் வெளியே வரமுடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது.

இந்தநிலையில், இந்தச் சம்பவத்திற்கு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், ”காவல்துறையினர் தங்கள் பணியைச் செய்ததற்காக, அவர்கள் மாண்பை குறைப்பது போல், “காவல் நாய்களே”, “எச்சைப் பிழைப்பு”, போன்ற கோஷங்களை எழுப்புவது காக்கி சட்டைக்கு களங்கம் விளைவிக்கும் செயல் என்பதை இதுபோன்ற அரசியல் கட்சிகள் உணர வேண்டும். ஓரிரு காவலர்கள் செய்யும் தவறுகளுக்கு, ஒட்டு மொத்த காவல்துறையினரை அவதூறாகப் பேசுவது ஏற்றுக் கொள்ள முடியாதது. தங்களது உயிரை துச்சமாகக் கருதி, மக்களை காக்க உழைக்கும் காவல்துறையினரை, தங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கும், அரசியல் காரணங்களுக்கும், இது போன்று அவதூறாகப் பேசுவது கடுமையாக கண்டிக்கத்தக்கது. காவல்துறையினரின் மன உறுதியை குறைக்கும் வகையில் கோஷங்களை எழுப்பும் தங்களது கூட்டணி கட்சியினர் மேல், காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,” எனப் பதிவிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Vck raise slogans against arani police video goes viral