விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை செய்த விவகாரம் : விளக்கம் அளிக்க வருமான வரித்துறைக்கு உத்தரவு!
அனைத்து சாட்சியங்களிடமும் குறுக்கு விசாரணை செய்து முடிக்கும் வரை, வருமான வரிக் கணக்கு மதிப்பீடு தொடர்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என கோரிக்கை!
Vijayabhaskar's residence IT raid high court asks explanation : வருமான வரி வழக்கில் ஏழு சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய அனுமதி கோரி அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனு குறித்து விளக்கமளிக்க வருமான வரித்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் 2017 ஏப்ரலில் நடந்த வருமான வரித்துறை சோதனையின் அடிப்படையில், 2011-12ம் நிதி ஆண்டிலிருந்து 2018-19ம் ஆண்டு வரை தாக்கல் செய்த வருமான வரி கணக்குகளை மறு மதிப்பீடு செய்யும் நடைமுறைகளை வருமான வரித்துறை மேற்கொண்டு வருகிறது.
Advertisment
19 வருடத்திற்கு முன்பு சச்சினுக்கு சென்னை ரசிகர் கொடுத்த பேட்டிங் டிப்..
அந்த நடைமுறையில் 12 பேர் சாட்சியம் அளித்த நிலையில், அவர்களில் 5 பேரை மட்டுமே விஜயபாஸ்கர் தரப்பு குறுக்கு விசாரணை செய்ய வருமான வரித்துறை அனுமதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மீதமுள்ள சேகர் ரெட்டி, சீனிவாசுலு, மாதவ் ராவ் உள்ளிட்ட 7 பேரையும் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க கோரியும், தனக்கு எதிராக திரட்டபட்ட ஆவணங்களின் நகல்களை வழங்க கோரியும் வருமான வரித்துறையிடம் பல முறை மனு அளிக்கப்பட்டது.
ஆனால் அதில் வருமான வரித்துறை முடிவெடுக்காமல் இருப்பதால், சாட்சியங்களை குறுக்கு விசாரணை செய்யவும், ஆவணங்களை வழங்க உத்தரவிடக் கோரியும் அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், அனைத்து சாட்சியங்களிடமும் குறுக்கு விசாரணை செய்து முடிக்கும் வரை, வருமான வரிக் கணக்கு மதிப்பீடு தொடர்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என வருமான வரித்துறைக்கு உத்தரவிடவும் கோரியுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், மனு குறித்து நாளை மறுதினம் விளக்கமளிக்கும்படி வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.