Arun Janardhanan
தண்ணீருக்காக அடித்துக் கொள்ளும் தமிழகம். கடந்த வாரம் மோகன் தன்னுடைய சம்பில் நீருக்காக மோட்டர் போட அக்கம் பக்கத்தினர் சண்டைக்கு வந்துள்ளனர். கணவருக்கு ஆதரவாக சுபாஷினி பதிலுக்கு சண்டைக்கு வர, அருகில் இருந்த ஆதிமூலம் ராமகிருஷ்ணன் சுபாஷினியின் கழுத்தில் கூர்மையான ஆயுதம் கொண்டு தாக்கியுள்ளார்.
ராமகிருஷ்ணன், தமிழக சபாநாயகர் பி. தன்பாலின் ஓட்டுநர் ஆவார். அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது காவல்துறை. அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார் சுபாஷினி. தமிழக தலைநகரில் தண்ணீருக்காக வெடிக்கும் வன்முறைகள் சற்று அச்சுறுத்தலைத் தான் தருகிறது.
பருவமழை துவங்கினாலும், நீர் நிலைகளில் தண்ணீர் இல்லை. சென்னையில் ஐ.டி. நிறுவனங்கள் மற்றும் உணவகங்கள் குடிநீர் இல்லாமல் தங்களின் செயல்பாட்டினை நிறுத்தி வருகின்றன. பொதுமக்கள் தண்ணீர் லாரிகளுக்கு புக் செய்து வாரக்கணக்கில் காத்துக் கொண்டிருக்கின்றனர். அரசோ, சட்டத்திற்கு புறம்பாக தண்ணீரை சேமித்து கொள்ளக்கூடாது என்பதற்காக வீடுகளுக்கு குடிநீர் விநியோகத்தை தடை செய்துள்ளது.
சென்னையில் மட்டும் இந்த பிரச்சனை இல்லை. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதே பிரச்சனை நிலவி வருகிறது. 33 வயதான ஆனந்த பாபு என்ற சமூக செயற்பாட்டாளர் அளவுக்கு அதிகமான தண்ணீர் சேகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கையில் அவருடைய சுற்றத்தினர் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
தஞ்சாவூரில் நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. 48 வயதான குமார் என்பவர் பெரிய பெரிய தண்ணீர் ட்ரம்களை, அருகில் இருக்கும் டேங்கில் வைத்து தண்ணீர் பிடிக்க முயன்றுள்ளார். ஒரு குட தண்ணீருக்காகவே மக்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் போது எப்படி இப்படி ஒருவர் மட்டும் அதிக அளவு தண்ணீரை பிடிக்கலாம் என பாபுவுக்கும் குமாருக்கும் இடையே வாக்கு வாதம் முற்ற குமார், தன்னுடைய இரண்டு மகன்களுடன் சேர்ந்து பாபுவை தாக்கியுள்ளார்.
இந்த பிரச்சனைக்கு எதிராக குரல் கொடுக்கும் திமுக தலைவர் ஸ்டாலின், எஸ்.பி. வேலுமணியை பதவி விலகுமாறும், அவர் அத்ற்கு மறுத்தால், முதல்வரே அவரை பணியில் இருந்து நீக்குமாறும் கூறியுள்ளார். மக்களின் தண்ணீர் பிரச்சனைக்கு என்ன தீர்வு என்று சென்னை உயர் நீதிமன்றம் அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது.
உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள், ஐ.டி. நிறுவனங்கள் என பல செயல்பாடுகள் தண்ணீர் தட்டுப்பாட்டால் நின்றுவிட்டன. ஊழல் செய்வதில் பிஸியாக இருக்கும் அமைச்சர் இந்த கேள்விக்கு பதில் அளிப்பாரா என்று சனிக்கிழமை தன்னுடைய அறிக்கையில் அறிவித்திருக்கிறார் ஸ்டாலின்.
இந்நிலையில் தற்போது அதிமுகவோ, 29 மாவட்டங்களிலும் செயல்பட்டு நீர்நிலைகளை தூய்மைப்படுத்துவதற்காக நடப்பு நிதியாண்டில் 500 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் உயரும் என்றும் அறிவித்திருக்கிறது.
சென்னை மெட்ரோ வாட்டர் அத்தாரிட்டி இது தொடர்பாக பேசும் போது, தண்ணீரை திருட்டுத்தனமாக சேமிக்க முயலும் பலரின் வீடுகளுக்கு கடந்த வாரங்களில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
தற்போது தென்னக ரயில்வேயும் இதனால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. ரயில் சேவைகளுக்கு பயன்படுத்தப்படும் நீர் வெகு தொலைவில் இருந்து கொண்டு வரப்படுவதாக அவர் அறிவித்துள்ளார்.
மெட்ரோ வாட்டர் சப்ளை மற்றும் குடிநீர் வாரியத்தின் இயக்குநர் டி.என். ஹரிஹரன் கூறுகையில், பொதுவாக நாள் ஒன்றுக்கு 830 மில்லியன் லிட்டர் தண்ணீரை பொதுமக்களுக்கு விநியோகம் செய்வோம். ஆனால் தற்போது 525 மில்லியன் லிட்டர்களாக அவை குறைந்துவிட்டது. இதே நிலை நீடித்தாலும் நவம்பர் வரை எங்களால் தாக்குபிடிக்க இயலும் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் படிக்க : நீரின்றி அலையும் தமிழகம்… வருங்காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு உருவாகாத வகையில் திட்டங்கள் அமைக்கப்படுமா?