TikTok India has suspended popular star Faizal Siddiqui’s account : டிக்டாக்கில் புகழ்பெற்ற கண்டெண்ட் கிரியேட்டராக இருக்கிறார் ஃபைசல் சித்திக் என்பவர். சில நாட்களுக்கு முன்பு, ஆசிட் வீச்சினை நியாயம் செய்யும் படி வீடியோ ஒன்றை வெளியிட்டார். பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறைகளுக்கு தீர்வு காண ஒரு புறம் அல்லும் பகலும் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சிலர் தங்களுக்கு இருக்கும் புகழை பயன்படுத்தி இது போன்ற மோசமான கருத்தாக்கங்களை மக்கள் மனதில் விதைத்து அதனை நியாயப்படுத்தவும் செய்கிறார்கள்.
இந்த வீடியோவால் கடும் விமர்சனத்துக்கு ஆளானார் ஃபைசல் சித்திக். தற்போது அந்த பயனரின் கணக்கை முடக்கியுள்ளது டிக்டாக். மேலும் சட்ட அமலாக்க அலுவலர்கள் வழங்கும் வழிகாட்டுதலின் படி நடக்கவும் வாக்கு கொடுத்துள்ளது டிக்டாக் நிறுவனம். தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா ஷர்மா, குரூப் ஆஃப் மினிஸ்டரிக்கு எழுதிய கடிதத்தில் “டிக்டாக்கை நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் டிக்டாக்கில் வெளியிடப்படும் வீடியோக்கள் ஆட்சேபணை தெரிவிக்கும் வகையில் இருப்பதோடு ஆயிரக்கணகான இளைஞர்களை, வெறும் லைக்குகளுக்காக, அன்ப்ரோடெக்டிவாகவும் வாழ வைக்கும் ஒன்றாக இது இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஃபைசலின் வீடியோவுக்கு பதில் அளித்திருக்கும் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லட்சுமி அகர்வால் “ஆசிட் அட்டாக்கை நீங்கள் எப்படி நியாயம் செய்ய முடியும். ஆசிட் அட்டாக்கால் வாழ்க்கை எப்படி மாறிப்போகும் என்பதை நீங்கள் ஒரு போதும் யோசித்திருக்க மாட்டீர்கள். ஆசிட் அட்டாக்கால் ஏற்பட்ட விளைவு தான் இந்த முகம்” என்று தன்னுடைய வாழ்வில் நடந்த துயர் சம்பவத்தையும் விளக்கியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய டிக்டாக் இந்தியாவின் செய்தி தொடர்பாளர், நாங்கள் எந்த வகையிலும், பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் தரும் வகையான வீடியோக்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை உருவாக்கும் வீடியோக்களுக்கு ஆதரவு அளிக்கவோ, ஊக்குவிக்கவோ மாட்டோம். அந்த வீடியோ எங்களின் கொள்கைகளுக்கு எதிராக இருந்த காரணத்தால் எங்களின் ப்ளாட்ஃபார்மில் இருந்து நீக்கிவிட்டோம். மேலும் அந்த கணக்கையும் முடக்கியுள்ளோம் என்று கூறியுள்ளார். சில நாட்களாக யுடியூப் அல்லது டிக்டாக் - இதில் எது சிறந்தது என்று விவாதம் நடைபெற்றுக் கொண்டுள்ளது. 15 நொடி வீடியோ எந்த வகையிலும் யுடியூப் கிரயேட்டர்களின் வீடியோவோடு ஒப்பிட முடியாது என்று பிரபமான யுடியூபர் கேரிமினாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டார். ஆனால் அது யுடியூப் கொள்கைகளுக்கு எதிராக இருந்த காரணத்தால் தளத்தில் இருந்து நீக்கப்பட்டது.
ஆனாலும் ரேப் கல்ச்சர், பெண்களுக்கு எதிரான வெறுப்பு மனப்பான்மை, ஆசிட் அட்டாக் போன்ற வன்முறைகளை தூண்டும் கண்டெண்ட்டுகளை டிக்டாக் ஆதரிக்கிறது என்று, யுடியூபர்கள் மற்றும் யுடியூப் ஃபேன்கள் டிக்டாக்கிற்கு 1 ஸ்டார் மட்டுமே ரேட்டிங்கில் கொடுத்து வருகின்றனர். இதனால் ப்ளே ஸ்டோரில் 4.5 நட்சத்திரங்களுடன் இருந்த டிக்டாக் தற்போது 1.3 நட்சத்திரங்களுடன் இருக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“