Advertisment

என்ன சொல்லப் போகிறாய்? 20 வருடங்கள் கழித்தும் மனதில் நிற்கும் இந்த திரைப்படம்!

பலமுகங்கள் ஒரு திரையில் தோன்றினால் அவர்கள் அனைவருக்கும் சரியான அளவில் ”ஸ்கிரீன் ஸ்பேஸ்” தருவதும் கொஞ்சம் சிரமமான காரியம் தான்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
20 Years Of Kandukondain Kandukondain

20 Years Of Kandukondain Kandukondain

20 Years Of Kandukondain Kandukondain :  தமிழ் சினிமா உலகில் பல்வேறு முகங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஒரு கதையை வடிவமைப்பதில் இன்னும் சிக்கல்கள் உள்ளது. ஒரு வேளை பலமுகங்கள் ஒரு திரையில் தோன்றினால் அவர்கள் அனைவருக்கும் சரியான அளவில் ”ஸ்கிரீன் ஸ்பேஸ்” தருவதும் கொஞ்சம் சிரமமான காரியம் தான். அப்படியான சூழலில் எக்கச்சக்க எதிர்பார்ப்புகளுடன் வெளியானது தான் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்.

Advertisment

ராஜீவ் மேனன் இயக்கத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில், வைரமுத்து பாடல் வரிகளில், சுஜாதாவின் எழுத்தில் இப்படம் வெளியானது. 1811ம் ஆண்டு ஜேன் ஆஸ்டென் எழுதிய சென்ஸ் அண்ட் சென்சிபிலிட்டி நாவலை அடிப்படையாக உருவாக்கப்பட்டது இந்த திரைப்படம்.

படத்தின் ஆரம்பமே, இலங்கையின் உள்நாட்டு போருக்கான காட்சி தான். படம் சமூகத்தின் நிலையை எடுத்து சொல்லப் போகிறது என்று ஆவலுடன் முன்னிருக்கையில் அமர, அடுத்த நொடியே கானாடுகாத்தானிற்கு செல்கிறது. மிகப் பெரிய நகரத்தார் கட்டிட கலையில் அமைய பெற்ற அரண்மனை வீட்டில் நான்கு பெண்கள். அவர்களுக்கு சில வேலைக்காரர்கள். வயோதிகத்தால் மரணத்தை தழுவ காத்திருக்கும் ஒரு முதியவர்.

இந்த கதை களம் இவர்களை சுற்றி தான். இந்த நான்கு பெண்கள் வாழ்வில் நிகழும் மாற்றங்களைப் பற்றி தான். பத்மா, தன்னுடைய விருப்பம் போல் காதலித்து திருமணம் செய்து கொண்டவர். அவருக்கு சௌமியா, மீனாட்சி, கமலா என்று மூன்று பெண்கள். காதலிப்பதும், அவரையே கரம் பிடிப்பதும் ஒரு குற்றமாக நினைத்துக் கொண்டு, அவருடைய அப்பா, அவருக்கு வழங்கும் அத்தனை மனரீதியான தண்டனைகளையும் ஏற்றுக் கொள்ளும் கதாப்பாத்திரத்தில் பத்மாவாக ஸ்ரீவித்யா.

இங்கு மனித மனங்களின் எண்ணங்களும், அதில் இருந்து வெளிப்படும் எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்களும் தான் இக்கதையை ரசிக்க வைத்தது. மனித மனமும் அது படுத்தும் பாடும், அதில் இருந்து மீண்டுவர வழியற்று போய் நிற்கும் தருணங்களும் தான் இந்த படத்தின் வெற்றிக்கான பாதை.  சௌமியா. கல்லூரி ஒன்றின் முதல்வர். திருமணம் என்ற பேரில் நடக்கும் கூத்துகளையும், அதனால் ஏற்படும் அவமானங்களையும் சுமந்து வாழும் பெண். ஆனாலும் சுயம் அறிந்தவள். வீட்டின் சூழல் புரிந்து நடப்பவள்.

மேலும் படிக்க : ’இசையில் மட்டுமல்ல பாசத்திலும் அவர் ஞானி தான்’ : ரசிகருக்கு வீடியோ கால் செய்த இளையராஜா!

அவளின் ஆசை தங்கை மீனாட்சி. எண்ணமெல்லாம் காதலும், கவிதையும், இலக்கியமும், அழகியலும். தன் எண்ண ஓட்டத்தோடு ஒருங்கிணைந்து செல்லும் ஒருவன் குதிரையில் வந்து தன்னை அள்ளிக் கொண்டு செல்வான் என்று பாரதி கவிதைகள் படிப்பவள்.

அதே ஊரில் வசிக்கும் மேஜர் பாலா. இலங்கை உள்நாட்டுப் போரில் காயம்பட்டு  திரும்பி வந்தவர், சிவகங்கையில் ஆர்ச்சிட் மலர் தோட்டம் வைத்திருக்கிறார். அமெரிக்காவில்  படித்துவிட்டு வந்து தனக்கென ஒரு அடையாளத்தை தக்க வைத்துக் கொள்ள போராடும். மனோகர்.  மீனாட்சியின் மனதை கொள்ளை கொள்ளும், கவிதை வரைய தெரிந்த இளைஞனாய் வலம் வருகிறார் ஸ்ரீகாந்த்.  இந்த ஐந்தில் நால்வர், தங்களின் பிரச்சனைகளில் இருந்து தங்களை மீட்டெடுக்க ஒருவர் வர காத்திருக்கும் இயல்பு நிலை மனிதர்கள். ஆனால் தனக்கென  ஒரு அடையாளத்தை தக்க வைத்துக் கொள்ள தொடர்ந்து முயலும் மனோகர்.

படப்பிடிப்பிற்காக சௌமியாவின் வீட்டினை வாடகைக்கு கேட்க வரும் மனோகரை, தவறுதலாக, சௌமியாவை பெண் பார்க்க வந்திருக்கும் மாப்பிள்ளை என்று தடபுடலாக வரவேற்பினை தருகிறார்கள் சௌமியாவின் வீட்டார். ஆனால் உண்மை தெரிந்ததும் உடனே நொருங்கி போகிறது சௌமியாவின் மனது. ஆனாலும் இது பழக்கப்பட்ட ஒன்று தான் என்று கடந்து போகிறாள். பெண் பார்க்கும் படலத்தில், ஏதோ ஆசைப்பட்டு ஒவ்வொரு முறையும் அலங்காரம் செய்து கொண்டு நிற்க பெண்கள் விரும்புவதில்லை என்று முகத்தில் அறைந்தார் போல், இதற்கு முன்பு ஒரு காட்சியை பார்த்ததாக நியாபகத்தில் இல்லை.

மேலும் படிக்க : கொரோனா ஹாட்ஸ்பாட்டா கோயம்பேடு சந்தை? : கொரோனா பரவலை தடுக்க தீர்வு இதோ.

ஆனாலும் சௌமியாவை பார்த்த பொழுதிலேயே மனோகருக்கு அவள் மீது ஒரு காதல். அளவு கடந்த மரியாதையையும் நெஞ்சில் சுமந்து, “ப்ரொஃபெசர், ப்ரொஃபெசர் என்று, பார்த்த நாளில் இருந்து சௌமியாவிற்காக உருகி, காத்திருக்கிறார் மனோகர்”. அப்போது வரும் என்ன ”சொல்லப் போகிறாய் பாடல்” இன்னும் பலருக்கு ஃபேவரைட். சங்கர் மகாதேவனுக்கு ”சிறந்த பின்னணி பாடகருக்கான” தேசிய விருதினை பெற்றுத் தந்தது அந்த பாடல்.

மணிவண்ணன் வீட்டில் வைக்கப்படும் கொலு ஒன்றில் மீனாட்சியை பார்த்ததும் பாலாவிற்கு காதல்.  ஆனாலும் தான் நேசிக்கும் ஸ்ரீகாவை எண்ணி எண்ணி உருகிக் கொண்டிருக்கிறாள் மீனாட்சி.  மீனாட்சியின் தாத்தா இறக்கும் தருவாயில் தன் தவறை உணர்ந்து, உயிலை தன் மகளுக்கு மாற்றி எழுத விரும்புவார். ஆனாலும் அவரின்  இறப்பிற்கு பின்பு பத்மாவை பார்க்க வரும் அவருடைய சகோதரன், மொத்தமாக வீட்டில் இருக்கும் அனைவரையும் வெளியேற சொல்லிவிடுவார்.   காரைக்குடியில் இருந்து புலம் பெயர்ந்து சென்னைக்கு வரும் இவர்களின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் படமாக விரியும்.

காதல் விட்டுக் கொடுக்கும். விடாப்பிடியாக வேண்டி நிற்கும். வருகின்ற வலிகளையும் காயங்களையும் சுமந்து கொள்ளும். ஆனால் ஒரு பெண்ணின் சுயமரியாதை கேள்விக்குறியாகும் வரை. தன்னை விட்டுச் சென்ற ஸ்ரீகாவிற்காக காத்துக் கொண்டிருக்கும் மீனாட்சி, தனக்கான முதல் சினிமா பாடல் வாய்ப்பில் அவரின் திருமண செய்தியை அறிந்து கொள்கிறார். மனம் வெதும்பி மரணிக்கும் தருவாயில், பாலா காப்பாற்ற, எது காதல் என்ற கேள்வி மீனாட்சிக்கு தோன்றுகிறது. “பச்சைக் கண் அழகியை பத்திரமாக பார்த்துக் கொள்ள” கடவுள் அனுப்பிய ஒருவராக பாலா மாற, காதலுக்கும் கரிசணத்திற்கும் அர்த்தம் அறிந்து கொள்கிறார் மீனாட்சி.

தமிழ் சினிமாவில் காதலை இவ்வளவு அழகாகவும், இவ்வளவு மென்மையாகவும்  தெரிவிக்கும் கதைகளுக்கும் வாய்ப்புகள் உண்டா என எண்ண வைத்த படம் அது. பிடிக்கும், ஆனால் சேர்ந்து வாழ வழியில்லை. பிடிக்கும், ஆனால் என் கனவுகளை நோக்கி நான் நகர்ந்து சென்றிருக்கின்றேன். எனக்கு உன்னை பிடிக்கிறது. ஆனாலும் நீ என் மீது காட்டும் கரிசணம் காதல் இல்லை. அது வெறும் கரிசணம் தான் என்று ஒரு முக்கோண காதலும், புரிதலோடு பயணிக்கும் காதல் மறுபுறமும் நம் வாழ்வில் இயல்பானது. அதை திரையில் திறம்பட எழுதியவர் யாருமில்லை. இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் மக்களால் கொண்டாடப்பட்ட இப்படம், 20 வருடங்கள் தாண்டியும் உணர்வுகள் பேசும் மொழியாக, மனதில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இப்படம் வெளியாகி 20 வருடங்கள் ஆகிறது என்று சொன்னால் நம்பத்தான் முடியுமா.? ரசிகர்கள் கொண்டாடும் கண்டுக்கொண்டேன் கண்டுகொண்டேன்.

Ajith Aishwarya Rai Bachchan Mammootty Rajiv Menon
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment