Sanam Shetty : பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமான தர்ஷன், தன்னை திருமணம் செய்துக் கொள்ள மறுப்பதாக நடிகை சனம் ஷெட்டி கடந்த வாரம் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியிருக்கிறது.
விளம்பர படங்களில் நடித்ததன் மூலம் சனம் ஷெட்டிக்கு அறிமுகமானார் தர்ஷன். பின்னர் இருவரும் காதலித்தனர். சனம் ஷெட்டியின் பெற்றோர் காதலுக்கு சம்மதம் தெரிவித்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் முன்பாக சனம் ஷெட்டியுடன் நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டார் தர்ஷன்.
ஆனால் இந்த விஷயம் தர்ஷனின் குடும்பத்துக்கு தெரியாது. தனது வாழ்க்கையில் சனம் ஷெட்டி தனக்கு ஏராளமான உதவிகளை செய்திருப்பதாக தர்ஷனே செய்தியாளர் சந்திப்பில் ஒப்புக்கொண்டார். இருப்பினும் சனம் ஷெட்டி அவருடைய முன்னாள் காதலருடன் பேசுவதாகக் கூறி, அவரை திருமணம் செய்து கொள்ள தர்ஷன் மறுப்பதாகக் கூறப்படுகிறது. தர்ஷன் சொல்வது போல் தங்களுக்குள் எந்த உறவும் இல்லை என்று சனம் ஷெட்டியின் முன்னாள் காதலர், சமீபத்திய நேர்க்காணல் ஒன்றில் விளக்கம் கொடுத்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று வந்த பிறகு, தர்ஷன் தன்னை புறக்கணிக்கிறார் என்று சனம் ஷெட்டி தெரிவித்திருந்தார். இந்நிலையில் 9 வாரங்களுக்கு முன்பு தர்ஷனுடன் இருக்கும் படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார் சனம். அதன் பிறகு அவர் தர்ஷனுடனான எந்த படத்தையும் பதிவிடவில்லை. மலேசியா காலிங் என்று குறிப்பிட்டிருந்த அவர் கண்கள், சோர்வாக இருக்கிறது. இந்த ஃபோட்டோ எடுப்பதற்கு முன்பு ஏதோ பிரச்னை நடந்ததாக சனம் தனது நேர்க்காணல் ஒன்றிலும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் தற்போது சனம் ஷெட்டியின் ரசிகர்கள் அந்த படத்தின் கமெண்ட் செக்ஷனில் தங்களது ஆறுதலை தெரிவித்து வருகிறார்கள். ”தர்ஷனுடனான எல்லா படங்களையும் நீக்குங்கள். அவரது எல்லா நினைவுகளையும் நீக்குங்கள். போனது போகட்டும் கர்மா உண்மையாக இருந்தால் நிச்சயம் அவரைத் தாக்கும். தனக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் ஒரு பெண்ணை ஒருவன் புறக்கணித்தால், இழப்பு அவனுக்குத் தான்” என்ற ரீதியில் பல கமெண்டுகள் பறக்கின்றன.