Corona Outbreak : உலகம் முழுவதும் கொரோனா அச்சத்தால் மூழ்கி இருக்கிறது. மக்கள் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வண்ணம் மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும், அடிக்கடி கைகளை கழுவுமாறும் அந்தந்த நாட்டு அரசும் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா தொற்றால் பல முக்கிய நிகழ்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் பற்றிய மெக்ஸிகன் குழந்தைகளின் நடன நிகழ்ச்சி : வீடியோ வைரல்
இதற்கு திரைப்படங்களின் படப்பிடிப்பும் விதி விலக்கு அல்ல. ஏற்கனவே நடிகர் விக்ரம் நடித்து வரும் ‘கோப்ரா’ படத்தின் படபிடிப்பு கொரொனா வைரஸால் தடைப்பட்டிருக்கும் செய்தியை சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தோம். ரஷ்யாவில் படபிடிப்பு நடத்த சென்ற ’கோப்ரா’ குழுவினர் ஏமாற்றத்துடன் சென்னை திரும்பினர். அதோடு கார்த்தியின், ‘சுல்தான்’ படத்தின் வெளியீடு குறித்த அப்டேட்டும் தடைப்பட்டிருப்பதை குறிப்பிட்டிருந்தோம்.
இந்நிலையில் தற்போது, அஜித்தின் ’வலிமை’ திரைப்படமும், சிம்புவின் ’மாநாடு’ திரைப்படமும் தற்போது கொரொனாவின் பாதிப்பை சந்தித்துள்ளது. இவ்விரு படங்களின் படபிடிப்பும் மார்ச் 19 முதல் 31 வரை ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அதோடு மலையாள நடிகை உத்ரா உன்னியும் தனது திருமணத்தை தள்ளி வைத்திருக்கிறார். மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ள உத்ரா, தமிழில் ‘வவ்வால் பசங்க’ எனும் தமிழ் படத்தில் நடித்திருந்தார்.
இவருக்கும் நித்தேஷ் நாயர் என்பவருக்கும் திருமணம் நிச்சயமானது. அவர்களின் திருமணம் அடுத்த மாதம் நடக்க இருந்த நிலையில், தற்போது அந்தக் கொண்டாட்டத்தை தள்ளி வைத்திருப்பதாகவும், அந்தத் தேதியை பின்னர் தெரிவிப்பதாகவும் இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருக்கிறார் உத்ரா. இருப்பினும் குறித்த தேதியில் தாலி கட்டும் நிகழ்வு சிம்பிளாக கோயிலில் நடக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தவிர, வரும் மார்ச் 20-ம் தேதி, “காக்டெய்ல், எனக்கு ஒண்ணு தெரிஞ்சாகணும், ஞானச்செருக்கு, கன்னி ராசி, காவல்துறை உங்கள் நண்பன், மரிஜுவானா, பல்லு படாம பாத்துக்க, புறநகர், சூடு, டைம் இல்ல” ஆகிய 10 படங்கள் வெளியாவதாக கடந்த சில நாட்களாக விளம்பரங்கள் வெளியாகின.
தற்போது அவற்றில் சில படங்கள் தங்களுடைய வெளியீட்டைத் தள்ளி வைத்திருக்கின்றன. தமிழ்நாட்டில் உள்ள பாதி மாவட்டங்களில் தியேட்டர்கள் மூடப்பட்டாலும் மீதி மாவட்டங்களில் மக்கள் தியேட்டர்களுக்கு வருவது பெருமளவு குறைந்துவிட்டது. இந்த நேரத்தில் படங்கள் வெளியானால், நிச்சயம் அது நஷ்டத்தில் தான் முடியும். ஆகையால் இந்தப் படங்களின் வெளியீடும் தள்ளி வைக்கப்படும் என்றே தெரிகிறது.
அதோடு, கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் வலைத் தொடர்களின் படப்பிடிப்புகளை, மார்ச் 19 முதல் மார்ச் 31 வரை, நிறுத்தி வைப்பதாக மேற்கிந்திய சினிமா ஊழியர்களின் கூட்டமைப்பு (FWICE), மற்றும் இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி இயக்குநர்கள் சங்கம் (IFTDA) உள்ளிட்ட திரைப்பட அமைப்புகள் முடிவு செய்துள்ளன.
’ரெய்டும் ஜாலியா தான் இருக்கு’: மாஸ்டர் ஆடியோ லாஞ்சில், கலகல விஜய்!
நடிகர் சாஹித் கபூர் தனது அடுத்தப் படமான ’ஜெர்சி’யின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதாக, சனிக்கிழமை அறிவித்தார். அக்ஷய் குமாரின் ‘சூர்யவன்ஷி’ திரைப்படத்தின் படபிடிப்பும் காலவரையின்றி நிறுத்தப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பால் தொற்றுநோயாக அறிவிக்கப்பட்ட வைரஸைக் கட்டுப்படுத்த கர்நாடகா, ராஜஸ்தான், உத்தரகண்ட், தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் இம்மாத இறுதி வரை திரையரங்குகளை மூடுமாறு அந்தந்த மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன.