Run Serial : சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ரன் சீரியலில் தெய்வ மகள் கிருஷ்ணா ஹீரோவாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக திவ்யா என்ற கதாபாத்திரத்தில் முன்பு சரண்யா சுந்தராஜ் நடித்து வந்தார். பிறகு கிருஷ்ணாவின் மனைவியும், நடிகையுமான சாயா சிங்கே ஜோடியானார். திடீரென ஜோடி மாற்றப்பட்டதால், ரசிகர்கள் இவர்களை ஏற்றுக் கொள்ள சிறிது நாட்களானது. சினிமா பாணியில் ஆரம்பத்தில் இந்த சீரியல் படு சுவாரஸ்யமாக இருந்தது.
ஜோடி மாறிய பிறகு கதையும் சவ்வா இழுத்ததால், கதையில் வேகம் குறைந்தது. நிழல்கள் ரவி மண்டையில் அடிப்பட்டு மருத்துவமனையிலேயே கண் விழிக்காமல் இருந்தார். தற்போது ஆபரேஷன் செய்து, அவர் ஒரு வழியாக குணமாகிறார். கண் விழித்து பேசுகையில் தான் சில முக்கியமான விஷயங்கள் அவருக்கு மறந்திருப்பது தெரிய வருகிறது. நிழல்கள் ரவியின் எதிரிகளையும் அவர் இந்த நேரத்தில் மறந்துவிட்டதால், கதை மீண்டும் சூடு பிடித்திருக்கிறது. ரன் சீரியல் ஆரம்பித்து 5 மாதங்கள் ஆகியிருக்கும் நிலையில், தற்போது தான் சீரியல் சரியான ரூட்டைப் பிடித்திருப்பதாக தெரிகிறது.
இதற்கிடையே சமீபத்தில் சன் குடும்ப விருதுகள் நடந்தது. அதில் கிருஷ்ணாவை சாயாசிங்கிடம் ப்ரொபோஸ் செய்யும்படி கேட்டுக் கொண்டார்கள். ஒரு கொத்து ரோஜா மலர் கொடுத்து ப்ரபோஸ் செய்கையில், சாயாசிங்கின் கண்களில் நீர் பெருக்கெடுத்தது. அப்போது பார்வையாளர்களும் உணர்வுப் பெருக்கில் இருந்தார்கள். விருது கொடுக்க வந்த வனிதா விஜயகுமார் கண்கலங்க, “உண்மையான காதலுக்கு என்னைக்கும் பிரிவும் இல்ல, முடிவும் இல்ல” என்றார்.