Vadivelu at Sun Kudumba Virudhugal : வீட்டில் பிரச்னை, அலுவலகத்தில் பிரச்னை, வெளியில் பிரச்னை என எத்தனை பிரச்னைகள் நம்மை சூழ்ந்திருந்தாலும், அவற்றை உடனடியாக மறக்கடித்து, விழுந்து விழுந்து சிரிக்க செய்பவர் வைகைப்புயல் வடிவேலு. டிவி, இணையம், மீம்ஸ், என காலத்திற்கு ஏற்றபடி ரசிகர்களுடன் இணைந்து பயணித்துக் கொண்டிருக்கிறார். சில காலமாக சினிமாவில் இவர் நடிக்காமல் இருந்தாலும் பல வழிகளில் ரசிகர்களுடன் நெருங்கிய தொடர்பில் தான் உள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் சன் டிவி-யின் ‘சன் குடும்ப விருதுகள்’ விழா நடந்தது. இதில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் பலர் கலந்துக் கொண்டனர். மேள தாளம், தாரை தப்பட்டை, மயிலாட்டம் ஒயிலாட்டம் என பாரம்பரிய கலைகளின் மூலம் வடிவேலுவை மேடைக்கு வரவேற்றனர். அப்போது பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் கை தட்டி, விசில் அடித்து ஆரவாரம் செய்தனர். சன் டிவி தொகுப்பாளர்கள் நடனமாடியவாறே வடிவேலுவை அழைத்து வந்தனர். அவர் மேடைக்கு வந்தும் கிட்டத்தட்ட 2 நிமிடங்கள் கரகோஷங்களால் தங்களது அன்பை வடிவேலுவுக்கு தெரியப்படுத்தினர் ரசிகர்கள்.
Advertisment
Advertisements
பின்னர் சன் டிவி-யின் சீரியல் ஹீரோயின்கள் ஆளுயர மலர் மாலையும், மலர் மகுடத்தையும் வடிவேலுவுக்கு அணிவித்தனர். பின்னர் ‘சிங் இன் த ரெயின்’ பாடலை பாடி அசத்தினார் வடிவேலு. இத்தனை ஆண்டுகள் ஆன போதிலும், அந்தப் பாடலில் எந்த வித்தியாசமும் இன்றி அப்படியே பாடியது, பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. பின்னர் ஃபேன் கேர்ள் மொமெண்டாக, அந்த சீரியல் நடிகைகள் அனைவரும் வடிவேலுவுடம் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
பின்னர் எல்லோருடனும் சேர்ந்து தன்னுடைய ஸ்டைலில் டான்ஸுன் ஆடினார் வடிவேலு. அவர் பாடும் போது அந்த டோனாகட்டும், ஆடும் போது அந்த பாடி லாங்வேஜாகட்டும் அத்தனையும் அப்படியே ஃப்ரிட்ஜில் வைத்த ஆப்பிள் போல ப்ரெஷ்ஷாகவே உள்ளது. கீழே ராதிகா, பூர்ணிமா பாக்யராஜ், ரேவதி, போன்ற மூத்த நடிகைகள் அமர்ந்திருந்தார்கள். ’என்ன விட பெரிய பெரிய நட்சத்திரங்கள் எல்லாம் கீழே உக்காந்துருக்காங்க. நான் இப்ப வந்தவன், அவங்க எல்லாம் எனக்கு மேல திரையுலகத்த பாத்தவங்க. சன் குடும்பம் மென்மேலும் வளரனும். வாழ்த்துகள்... வாழ்த்துகள்... வாழ்த்துகள்” என்றார் வடிவேலு.
கீழே அமர்ந்திருந்த ராதிகா, ”அவர் தேவதைகளுடன் மேலே இருக்கிறார். நாங்க குத்து விளக்குங்க இங்க உக்காந்துருக்கோம். எங்களுக்காக ஒரு பாட்டு” என்றார். அதன் பிறகு ‘மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்’ என்ற பாடலை பாடினார் வடிவேலு. தென்னகத்து சார்லி சாப்ளின் என, சார்லி சாப்ளின் உருவத்தில் வடிவேலுவின் படம் அவருக்கு பரிசு வழங்கப்பட்டது.
வடிவேலு வந்ததிலிருந்து, கர கோஷங்களும், ஆரவாரங்களும் மட்டும் குறையவே இல்லை. ரசிகர்களும், பிரபலங்களும் மனம் விட்டு சிரித்ததை அப்போது பார்க்க முடிந்தது.