Vani Bhojan : சின்னத்திரையில் ‘தெய்வமகள்’ சீரியல் மூலம் ரசிகர்களைக் கவர்ந்து, தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தை அமைத்துக் கொண்டவர் நடிகை வாணி போஜன். பின்னர் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு தாவினார். இவரது நடிப்பில் ‘ஓ மை கடவுளே’ என்ற படம் சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. இதில் அசோக் செல்வன், ரித்திகா சிங் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். இரண்டாவது ஹீரோயினாக வாணி நடித்திருந்தார். படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கியிருந்தார்.
படத்தில் அசோக் செல்வனும் வாணி போஜனும் பள்ளி பருவத்தில் ஒன்றாக படித்தவர்கள் போல நடித்திருப்பார்கள். ஒரு சீனில் வாணி போஜன் அவருடைய செல்போன் நம்பரை அசோக் செல்வனுக்கு கொடுப்பார். அந்த எண் தன்னுடையது எனவும், தற்போது இந்த காட்சியால் மிகுந்த பிரச்னைக்கு ஆளாகியுள்ளேன் எனவும் ரியல் எஸ்டேட் செய்து வரும் பூபாலன் என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
Advertisment
Advertisements
”தினமும் 50-க்கும் மேற்பட்ட நபர்கள் போன் செய்து, வாணி போஜன் இருக்கிறாரா, நான் அவரிடம் பேச வேண்டும் என தொல்லை கொடுத்து வருகின்றனர். இதனால் என் தொழிலில் மந்த நிலை ஏற்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். எனவே எனது செல்போன் எண்ணை ‘ஓ மை கடவுளே’ படத்தில் பயன்படுத்திய, இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து மீது நடவடிக்கை எடுக்கவும், மீண்டும் தமக்கு வாணி போஜனை கேட்டு போன் செய்யும் பிரச்னையில் இருந்து விடுவிக்கவும் ஆவணம் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என பூபாலன் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.