ஆசைத் தம்பி
உலகக் கோப்பை கால்பந்து தொடரில், கடந்த 16ம் தேதி நடைபெற்ற ‘டி’ பிரிவு ஆட்டத்தில் அர்ஜென்டினா மற்றும் ஐஸ்லாந்து அணிகள் மோதின. இப்போட்டி 1-1 என டிராவானது.
அர்ஜென்டினா சார்பில் செர்ஜியோ அகிரோ ஒரு கோல் அடித்தார். ஐஸ்லாந்து அணியின் ஆல்பிரட் பின்பகாசன் பதில் கோல் அடிக்க ஆட்டம் சமமானது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மெஸ்ஸியால் கடைசி வரை கோல் அடிக்க முடியவில்லை.
இந்த ஆட்டத்தில் 1-1 என இரு அணிகளும் சமநிலையில் இருந்தபோது, அர்ஜென்டினாவிற்கு மிக எளிதான ஃபெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ஆனால், மெஸ்ஸி அடித்த பந்தை ஐஸ்லாந்து கோல் கீப்பர் ஹேன்ஸ் ஹால்டோர்சன் தடுத்ததால், அர்ஜென்டினாவின் வெற்றி வாய்ப்பு பறிபோனது. அதுமட்டுமின்றி, கடைசி சில நிமிடங்களில் மெஸ்ஸி ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியும், அவரை ரவுண்டு கட்டிய ஐஸ்லாந்து வீரர்கள், கடைசி வரை கோல் அடிக்க முடியாமல் செய்துவிட்டனர்.
மேலும் படிக்க - இன்றைய(ஜூன் 19) கால்பந்து போட்டிகள் விவரம்
பெனால்டி வாய்ப்பை கோட்டைவிட்டதால், ரசிகர்கள் மெஸ்ஸியை கடுமையாக விமர்சித்தனர். அதேசமயம், அவருக்கு ஆதரவாகவும் குரல்கள் எழுந்தன. குறிப்பாக, அன்றைய போட்டியில் அர்ஜென்டினா அணிக்கு கோல் அடித்த செர்ஜியோ அக்யூரோ கூறுகையில் ‘‘பெனால்டி வாய்ப்பை தவறவிட்ட மெஸ்ஸி சாதாரணமாகத்தான் இருக்கிறார். அவரும் ஒரு மனிதர்தான். இன்று நாங்கள் அவருக்கு துணையாக இருக்கிறோம். எந்தவொரு நிலையில் அவரால் அணியை வெற்றி பாதைக்கு கொண்டு செல்ல முடியும் என்பது எங்களுக்குத் தெரியும். முதல் போட்டி எப்போதுமே கடினம்தான். அர்ஜென்டினா ஒவ்வொரு எதிரணியையும் வீழ்த்த விரும்புகிறது. குரோஷியா போட்டியில் இதைவிட சிறப்பாக விளையாடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.
மேலும் படிக்க - நேற்றைய போட்டிகளின் முடிவுகள்! ஒரு குயிக் ரீகேப்
இந்நிலையில், இந்த ஆட்டம் குறித்து அர்ஜென்டினா அணியின் முன்னாள் ஜாம்பவான் மாரடோனா காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "ஐஸ்லாந்து அணியுடன் டிரா கண்டது அவமானமாகும். இந்த ஆட்டத்தில் நான் எந்த தனிப்பட்ட வீரரையும் குறை சொல்ல மாட்டேன். மெஸ்ஸி ஃபெனால்டி வாய்ப்பை தவறவிட்டது தான் வெற்றி கிடைக்காமல் போனதற்கு காரணம் என்று நினைக்கவில்லை. 1.90m உயரம் கொண்டிருக்கும் ஐஸ்லாந்து அணி வீரர்களுக்கு தகுந்தபடி ஆட்ட யுக்தியை அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளர் செயல்படுத்தவில்லை. இந்த மாதிரி தொடர்ந்து விளையாடினால் அர்ஜென்டினா அணி நிச்சயம் நாடு திரும்ப முடியாது’ என்றார்.
அர்ஜென்டினா வரும் 21ம் தேதி குரோஷியா அணிக்கு எதிராக தனது இரண்டாவது போட்டியில் ஆடவுள்ளது குறிப்பிடத்தக்கது.