ஓட்ஸ் மற்றும் உலர்ந்த பழங்களின் கலவையுடன் தயாரிக்கப்படும் கிரானோலா பார்கள், காலை உணவிற்கோ அல்லது மாலை நேர சிற்றுண்டிக்கோ ஏற்ற ஒரு சத்தான மற்றும் சுவையான தேர்வாகும். குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பிடித்த இந்த கிரானோலா பார்களை வீட்டிலேயே எளிதாகத் தயாரிக்கலாம். ஒரு வாரத்திற்கும் மேலாகப் பாதுகாக்கக்கூடிய இவை, வெயிட்லாஸ் செய்வதற்கு ஏற்றதாக இருக்கும். இதனை எப்படி எளிமையான முறையில் எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
ரோல்டு ஓட்ஸ் - 2 கப்
இன்ஸ்டன்ட் ஓட்ஸ் - 1/2 கப்
பாதாம் - 3/4 கப் (நறுக்கியது)
உப்பில்லாத வெண்ணெய் - 1/3 கப்
நாட்டு சர்க்கரை - 1/4 கப்
தேன் - 1/4 கப்
வெண்ணிலா எசன்ஸ் - 1 தேக்கரண்டி
உலர்ந்த கிரான்பெர்ரி - 1/4 கப்
சாக்லேட் சிப்ஸ் - 1 மேசைக்கரண்டி
செய்முறை:
ஒரு பெரிய பாத்திரத்தில் ரோல்டு ஓட்ஸ், இன்ஸ்டன்ட் ஓட்ஸ் மற்றும் நறுக்கிய பாதாம் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும். இவற்றை மிதமான தீயில் சுமார் 15 நிமிடங்கள் வரை வறுக்கவும். ஓட்ஸ் மற்றும் பாதாம் பொன்னிறமாக மாறி, ஒரு நறுமணம் வரும் வரை வறுக்க வேண்டும்.
15 நிமிடங்களுக்குப் பிறகு, அடுப்பை அணைத்து, வறுத்த பொருட்களை ஒரு அகலமான பாத்திரத்திற்கு மாற்றி, அவை முழுமையாக ஆறும் வரை தனியாக வைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் உப்பில்லாத வெண்ணெய், நாட்டு சர்க்கரை மற்றும் தேன் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும். தீயை மிதமாக வைத்து, சர்க்கரை முழுவதுமாகக் கரையும் வரை கிளறவும்.
சர்க்கரை கரைந்ததும், வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து சிரப்பை ஒரு கொதி வரும் வரை கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பித்தவுடன் அடுப்பை அணைத்து விடவும். வெண்ணிலா சிரப்பை, ஏற்கனவே வறுத்து ஆறவைத்த ஓட்ஸ் மற்றும் பாதாம் கலவையுடன் சேர்க்கவும். பின்னர், உலர்ந்த கிரான்பெர்ரி மற்றும் சாக்லேட் சிப்ஸை (மேலே தூவப்படுவதை தவிர) சேர்த்து எல்லாவற்றையும் நன்கு கலந்து விடவும். சிரப் எல்லா பொருட்களுடனும் நன்றாகப் படும்படி கிளறவும்.
ஒரு பேக்கிங் டின்னில் பட்டர் பேப்பர் விரித்து, கலந்து வைத்துள்ள ஓட்ஸ் கலவையை அதில் கொட்டி சமமாகப் பரப்பவும். கலவையின் மேல் மீதமுள்ள சாக்லேட் சிப்ஸ்களைத் தூவி, ஒரு ஸ்பூன் அல்லது ஒரு கிண்ணத்தின் அடிப்பகுதியைப் பயன்படுத்தி கலவையை மெதுவாகவும், சமமாகவும் அழுத்தவும். இது பார்கள் பிடிமானத்துடன் இருக்க உதவும்.
டின்னை குளிர்சாதன பெட்டியில் வைத்து, ஓட்ஸ் கலவையை சுமார் 3 மணி நேரம் குளிர விடவும். இது கிரானோலா பார்கள் கெட்டியாக மாற உதவும். 3 மணி நேரத்திற்குப் பிறகு, கிரானோலா கலவை கெட்டியாகிவிடும். விரும்பிய வடிவங்களில் வெட்டி பரிமாறவும்.
தயாரிக்கப்பட்ட கிரானோலா பார்களை காற்று புகாத டப்பாவில் குளிர்சாதன பெட்டியில் வைத்து ஒரு வாரத்திற்கும் மேலாகப் பாதுகாக்கலாம். தேவைப்படும் போது எடுத்து, ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான சிற்றுண்டியாக சாப்பிடலாம்.