முளைக்கீரை மிக சாதாரணமாக நமக்கு கிடைக்கக் கூடியது. ஆனால், அவற்றில் இருக்கும் மருத்துவ குணங்கள் ஏராளம் என மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். குறிப்பாக, வெப்ப மண்டலத்தில் வசிப்பவர்கள் அவசியம் முளைக்கீரையை எடுத்துக் கொள்ள வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார். ஏனெனில், உடலை குளிர்விக்க கூடிய தன்மை முளைக்கீரைக்கு இருப்பதாக அவர் கூறுகிறார்.
வயதின் காரணமாக உடலில் தளர்ச்சி ஏற்பட்டவர்களுக்கும், சிறு குழந்தைகளுக்கும் சம அளவு சத்துகள் தரும் குணம் முளைக்கீரைக்கு இருப்பதாக கூறப்படுகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கும் போது பொதுவாக கீரை வகைகளை உணவாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அந்த சமயத்தில் செரிமானத்திற்கு சிரமமாக இருப்பதால், அவற்றை தவிர்த்து விடுவது உண்டு.
ஆனால், முளைக்கீரையை எந்த நேரத்திலும் எடுத்துக் கொள்ளலாம் என சித்த மருத்துவம் கூறுவதாக மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார். சிறுநீரக பாதையில் எரிச்சல் இருப்பவர்களுக்கும் முளைக்கீரை மருந்தாக கொடுக்கப்படுகிறது. இதேபோல், பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சனையையும் தீர்க்கும் தன்மை முளைக்கீரைக்கு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
வாய்ப்புண், கண்களில் எரிச்சல் போன்ற நோய்களும் உடல் சூடு காரணமாக வருகிறது எனக் கூறிய மருத்துவர் சிவராமன், இவற்றை தடுக்க முளைக்கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம் என்று பரிந்துரைத்துள்ளார். எனினும், சளி தொல்லை இருக்கும் போது முளைக்கீரை எடுத்துக் கொள்வதை தவிர்த்து விடலாம் என்று அவர் கூறியுள்ளார். மேலும், கீரை வகைகளை இரவு நேரத்திலும், தயிர் சாதத்துடனும், இறைச்சிகளுடனும் சேர்த்து சாப்பிடக் கூடாது என்று மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.