IPL 2020: ஐ.பி.எல்-லின் நேற்றைய லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. டாஸை வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். ஏற்கனவே பிளே ஆஃப் வாய்ப்பை இழந்திருக்கும் சென்னை அணியின் இந்த போட்டி மற்ற அணிகளுக்கு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
வீட்டில் இருந்தே மருத்துவ ஆலோசனை பெறலாம்: தமிழக அரசின் இந்தத் திட்டம் எத்தனை பேருக்கு தெரியும்?
கொல்கத்தா அணி இந்தப் போட்டியில் வென்றால் பிளே-ஆஃப் செல்லும் வாய்ப்பை அதிகரிக்க முடியும். அதே சமயம், ராஜஸ்தான், ஹைதராபாத் அணிகள் தங்கள் பிளே-ஆஃப் வாய்ப்பை இழக்க நேரிடும் என்ற பரபரப்பு இருந்தது. இதற்காக சென்னை அணிக்கு ஆதரவளித்து ராஜஸ்தான் அணி தனது ட்விட்டர் கைபிடியில், ‘விசில்போடு’ என்ற ஹேஸ்டேக்கையும் பதிவிட்டிருந்தது. இதற்கு விசில் போடும் படத்தை பதிவிட்டு, சன் ரைசர்ஸ் அணியும் பதிலளித்திருந்தது.
இந்நிலையில், நேற்றைய போட்டியில் சிஎஸ்கே அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா அணிக்கு ஷுப்மன் கில் - நிதிஷ் ராணா துவக்க வீரர்களாக களம் இறங்கினர். கில் 17 பந்துகளில் 26 ரன்கள் குவித்தார். ராணா நிலைத்து நின்று ரன் குவிக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ராணா 61 பந்துகளில் 87 ரன்கள் குவித்தார். கடைசி நேரத்தில் தினேஷ் கார்த்திக் 10 பந்துகளில் 21 ரன்கள் சேர்த்தார். இவர்கள் இருவர் மட்டுமே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சிறப்பாக ஆடிய பேட்ஸ்மேன்கள். இதனால் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்களை இழந்து, 172 ரன்களை கொல்கத்தா அணி எடுத்திருந்தது.
சென்னை அணியின் பாப் டுபிளெசிஸ் நீக்கப்பட்டு இருந்த நிலையில், போட்டி கொல்கத்தாவுக்கு சாதகமாக மாறக்கூடுமோ என்ற நிலை ஆரம்பத்தில் இருந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் வாட்சனும், ருதுராஜும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். வாட்சன் 19 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ராயுடு 20 பந்துகளில் 38 ரன்கள் குவித்து ரன் ரேட்டை ஏற்றினார்.
போன போட்டி போல இந்த போட்டியிலும் தேவையை உணர்ந்து நின்று ஆடினார் ருதுராஜ். அரைசதம் கடந்த அவர் 53 பந்துகளில் 72 ரன்கள் குவித்து 18-வது ஓவரில் ஆட்டமிழந்தார். அப்போது ஜடேஜா களமிறங்கி, சாம் கர்ரனுடன் ஜோடி சேர்ந்தார். கடைசி 2 ஓவர்களில் 30 ரன்கள் வேண்டும் என்ற நிலையில், பெர்குசன் வீசிய 19-வது ஓவரில் 2 ஃபோர், 1 சிக்ஸ் அடித்து தெறிக்கவிட்டார் ஜடேஜா. அந்த ஓவரில் மட்டும் சிஎஸ்கே 20 ரன்கள் எடுத்தது.
கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவை என்ற நிலையில், சாம் கர்ரன் முதல் மூன்று பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுத்தார். 4-வது பந்தை டாட் பால் ஆடிய ஜடேஜா, அடுத்த பந்தில் சிக்ஸ் அடித்தார். கடைசி பந்தில் ஒரு ரன் தேவை என்ற நிலையில் ஜடேஜா மீண்டும் சிக்ஸ் அடித்து சென்னை அணியை வெற்றி பெறச் செய்தார்.
பின்வாங்கிய ரஜினி… பின்னணி என்ன?
இதனால் 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் வீழ்த்தியது. ஜடேஜா 11 பந்துகளில் 31 ரன்கள் குவித்தார். கொல்கத்தாவின் இந்த தோல்வி மூலம் ராஜஸ்தான், ஹைதராபாத் அணிகளின் பிளே-ஆஃப் வாய்ப்பு காப்பாற்றப்பட்டுள்ளது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”