அணிகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக ஐ.சி.சி அகாடமியின் மைதானத்தை பி.சி.சி.ஐ, வாடகைக்கு எடுக்கும் என்று தெரிகிறது
IPL 2020 Schedule: ஒருபக்கம் வைரஸ் பரவிக் கொண்டிருக்க, அதற்கு மருந்தே இல்லாமல் பலரும் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்க, மறுபக்கம் ஐபிஎல் 2020 தனது இறுதி வடிவத்தை நெருங்கியுள்ளது.
Advertisment
இந்தியன் பிரீமியர் லீக் செப்டம்பர் 19 ஆம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (யுஏஇ) தொடங்க உள்ளது. நவம்பர் 8 ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெறும் என்று ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் வெள்ளிக்கிழமை பி.டி.ஐ-யிடம் தெரிவித்துள்ளார்.
அடுத்த வாரம் கூடும் ஐபிஎல் ஆட்சி மன்றக் கூட்டத்தில், இறுதி முடிவு எடுக்கப்பட்டு அட்டவணை இறுதி செய்யப்படும். பி.சி.சி.ஐ இந்த திட்டம் குறித்து அணி உரிமையாளர்களிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
"ஐபிஎல் ஆட்சி மன்றக் கூட்டம் விரைவில் சந்திக்கும், ஆனால் நாங்கள் அட்டவணையை இறுதி செய்துள்ளோம். செப்டம்பர் 19 முதல் நவம்பர் 8 வரை ஐபிஎல் நடைபெறும். அரசாங்கத்தின் ஒப்புதல் வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். 51 நாட்கள் இத்தொடர் நடைபெறும்” என்று பிரிஜேஷ் படேல் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், "மைதானத்தில் கூட்டத்தை அனுமதிக்கலாமா இல்லையா என்பது ஐக்கிய அரபு எமிரேட் அரசாங்கத்தைப் பொறுத்தது. எப்படியும் தனி நபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அதை அவர்களின் அரசாங்கம் தீர்மானிக்க நாங்கள் விட்டுவிட்டோம்" என்றும் படேல் கூறினார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் - துபாய் சர்வதேச ஸ்டேடியம், ஷேக் சயீத் ஸ்டேடியம் (அபுதாபி) மற்றும் ஷார்ஜா மைதானத்தில் மூன்று மைதானங்கள் உள்ளன.
அணிகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக ஐ.சி.சி அகாடமியின் மைதானத்தை பி.சி.சி.ஐ, வாடகைக்கு எடுக்கும் என்று தெரிகிறது.
ஐ.சி.சி அகாடமியில் 38 turf பிட்சுகள், 6 உட்புற பிட்சுகள், 5700 சதுர அடி வெளிப்புற கண்டிஷனிங் பகுதி மற்றும் பிசியோதெரபி மற்றும் மருந்து மையம் ஆகியவற்றுடன் இரண்டு முழு அளவிலான கிரிக்கெட் மைதானங்கள் உள்ளன.
துபாயில் தற்போதைய சுகாதார நெறிமுறையின்படி, COVID-19 சோதனையில் நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்தால், அவர் தனிமைப்படுத்தப்பட வேண்டிய அவசியமில்லை, ஆனால் அப்படி இல்லையெனில், அவர்கள் ஒரு சோதனைக்கு உட்படுத்த வேண்டியிருக்கும்.
செப்டம்பர் 26 முதல் ஐ.பி.எல் தொடங்கும் என்று யூகங்கள் எழுந்தாலும், இந்திய அணியின் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக பி.சி.சி.ஐ அதை ஒரு வாரத்திற்குள் முன்னெடுக்க முடிவு செய்தது.