2 மாதத்தில் 2 இரட்டை சதம் - கவனிக்க வைக்கும் ராகுல் டிராவிட் மகன்
146 பந்துகளில் 33 பவுண்டரிகளுடன் 200 ரன் விளாசிய சமித் ஆட்டம் பார்வையாளர்களை வியக்க வைத்தது. இதனால், அவரது அணி 3 விக்கெட் இழப்புக்கு 377 ரன் (50 ஓவர்) குவித்தது
ராகுல் டிராவிட் எனும் ஒரு பிறவியால், தங்கள் வாழ்க்கையை நொந்து கொண்ட பவுலர்கள் எத்தனையோ பேர். நம்ம சோயப் அக்தர் உட்பட. மணிக்கு 150 கி.மீ வேகத்தில் வீசப்படும் பந்தை, குறைந்தபட்ச மரியாதை கூட இல்லாமல் கிரீஸ் உள்ளேயே தடுத்தி நிறுத்தினால், அந்த பவுலர் தன் பிறப்பை நினைத்து வெறுக்காமல் என்ன செய்வான்!
Advertisment
அதனால் தான் அந்த மனிதனை சுவர் என்று அழைக்கிறார்கள். அந்த சுவருக்கு பிறந்த குட்டிச் சுவர் அட்ராசிட்டி இப்போது தொடங்க ஆரம்பித்திருக்கிறது.
ராகுல் டிராவிட்டின் மகன் சமித் பெங்களூரில் உள்ள மல்லையா அதிதி சர்வதேச பள்ளியில் படித்து வருகிறார். கர்நாடகா கிரிக்கெட் சங்கம் சார்பில் நடந்த பி.டி.ஆர். ஷீல்டு 14 வயதுக்குட்பட்ட மண்டல போட்டியில் ராகுல் டிராவிட்டின் மகன் சமித் இரட்டை சதம் அடித்துள்ளார்.
146 பந்துகளில் 33 பவுண்டரிகளுடன் 200 ரன் விளாசிய சமித் ஆட்டம் பார்வையாளர்களை வியக்க வைத்தது. இதனால், அவரது அணி 3 விக்கெட் இழப்புக்கு 377 ரன் (50 ஓவர்) குவித்தது. அடுத்து ஆடிய ஸ்ரீகுமரன் குழந்தைகள் அகாடமி அணி 110 ரன்னில் சுருண்டது. இதனால் சமித் டிராவிட் அணி 267 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம், வைஸ் பிரசிடென்ட் XI அணிக்காக விளையாடிய சமித், 256 பந்துகளில் 22 பவுண்டரிகளுடன் 201 ரன்கள் அடித்திருந்தார். பிறகு எதிரணிக்கு பந்து வீசிய சமித் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி, அதே போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 94 ரன்கள் குவித்து நாட் அவுட் வீரராக களமாடினார்.
3 மாதங்களில் டிராவிட் மகன் 2-வது முறையாக இரட்டை சதம் அடித்திருப்பது இங்கு கவனிக்கத்தக்கது.