கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் 50 சதவீத படுக்கைகள் - மனு தள்ளுபடி
அப்போது மனுதாரர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரபட்ட வழக்கு மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி தொடரப்பட்டது என்றும், தங்களது மனு மாநில அரசுக்கு உத்தரவிடக்கோரி தொடர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது
கொரோனா சிகிச்சைக்கு கட்டணத்தை நிர்ணயிக்க கோரியும், தனியார் மருத்துவமனைகளில் 50 சதவீத படுக்கைகளை ஒதுக்க கோரியும் தாக்கல் செய்த தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
Advertisment
இதுதொடர்பாக, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் ஜவாஹிருல்லா தொடர்ந்த பொது நல வழக்கில், தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனைக்கு 4 ஆயிரத்து 500 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், பரிசோதனைக்கும், சிகிச்சைக்கும் அதிக கட்டணம் வசூலிப்பதாக வெளியாகும் செய்திகளை குறிப்பிட்டுள்ளார்.
டில்லி, குர்கான் பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் 12 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதையும், கொரோனாவுக்கு தனியாக சிகிச்சை இல்லை என்பதால், வழக்கமான வைரஸ் காய்ச்சல்களுக்கு வழங்கப்படும் சிகிச்சையே வழங்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அனைத்து தரப்பினருக்கும் சிகிச்சை வழங்க வேண்டிய கடமை தனியார் மருத்துவமனைகளுக்கு உள்ளதாகவும், பொருளாதார ரீதியில் நலிந்த பிரிவினரிடம் அதிக கட்டணம் வசூலிப்பது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கொரோனாவால் அதிக மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு மருத்துவமனைகளால் மட்டும் நிலைமையை சரி செய்து விட முடியாது என்பதால் தனியார் மருத்துவமனைகளில் பங்களிப்பு அசியமானது என்றும், வர்த்தக சுரண்டலை தடுக்க, கட்டண விகிதம் உள்ளிட்ட ஒழுங்குமுறைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனைகளை சிகிச்சை அளிக்க அனுமதித்த அரசு, கட்டணம் நிர்ணயிக்க தவறிவிட்டதால், தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிக்கிறது என்றும், சாதாரண மக்களால் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியவில்லை என்றும், மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதால் காப்பீடு கோரிக்கைகள் நிராகரிக்கப்படுவதாகவும் குற்றம் சாடியுள்ளார்.
எனவே தனியார் மருத்துவமனைகளில் 50 சதவீத படுக்கைகளை கொரோனா சிகிச்சைக்கு ஒதுக்கும்படி மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்த உத்தரவிட வேண்டும் என்றும், தனியார் மருத்துவமனைகளில் காலியாக உள்ள படுக்கைகள், நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ள விவரங்களை ஆய்வு செய்ய கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். குறிப்பாக கொரோனா சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
ஜவாஹிருல்லா வின் இந்த மனு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்ச நீதிமன்றத்திலும் இதுபோன்ற வழக்கு தொடரப்பட்டு உள்ளதாகவும், தனியார் மருத்துவமனைகளை எதிர்மனுதாரர்களாக சேர்க்கவில்லை என்பதையும், குறிப்பிட்டு எந்த அரசாணையை எதிர்த்தும் வழக்கு தொடரப்படவில்லை என்பதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அப்போது மனுதாரர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரபட்ட வழக்கு மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி தொடரப்பட்டது என்றும், தங்களது மனு மாநில அரசுக்கு உத்தரவிடக்கோரி தொடர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பொதுப்படையான குற்றச்சாட்டுக்கள் குறித்து நீதிமன்றம் விசாரணை நடத்த முடியாது என்றும், சரியான தகவலை மனுதாரர் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியதுடன், அடிப்படை உரிமைகள் மீறல் குறித்து குறிப்பிட்டு தெரிவிக்கவில்லை என்பதால் வழக்கை ஏற்க முடியாது என கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“