Tamil Nadu, DMK Executive Committee Meeting: திமுக செயற்குழுக் கூட்டம், மு.க.ஸ்டாலின், கருணாநிதிக்கு அஞ்சலி
DMK Executive Meeting: திமுக செயற்குழு இன்று (ஆகஸ்ட் 14) காலை 10 மணிக்கு சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது. கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அழகிரி மீதும், மத்திய அரசு மீதும் காரசார குற்றுச்சாட்டுகளை முன்வைத்து நிர்வாகிகள் பேசினர். துரைமுருகன் உருக்கமாக பேசினார்.
முன்னாள் முதல்வர் மற்றும் திமுக கட்சியின் தலைவருமான கலைஞர் கருணாநிதி கடந்த 7ம் தேதி மாலை 6.10 மணி அளவில் உடல்நலக் குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
Tamil Nadu, DMK Executive Committee Meeting: திமுக செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட செயற்குழு உறுப்பினர்களில் ஒரு பகுதியினர்!
அதனைத் தொடர்ந்து கட்சியின் தலைவராக யார் பொறுப்பேற்பார் என்ற குழப்பம் நீடித்து வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் இன்று திமுக செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என திமுகவின் பொதுச்செயலாளர் க. அன்பழகன் தெரிவித்துள்ளார்.
தொண்டர்கள் மத்தியில் திமுக கட்சியின் தலைவராக தற்போது கட்சியின் செயல் தலைவராக இயங்கி வரும் கருணாநிதியின் மகன் முக ஸ்டாலின் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
கட்சியின் பொதுக்குழு கூட்டம் அடுத்த மாதம் நடைபெறலாம் என்ற சூழல் நிலவி வந்த நிலையில், முக ஸ்டாலின், அன்பழகனை அவரது வீட்டில் சந்தித்து பேசியிருக்கிறார். அதனைத் தொடர்ந்து க.அன்பழகன் செயற்குழு தொடர்பான அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருக்கிறார்.
அதன்படி காலை 10 மணி அளவில் கட்சியின் செயற்குழு கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது என்றும் ஆகவே செயற்குழு உறுப்பினர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.
Tamil Nadu, DMK Executive Committee Meeting: திமுக செயற்குழுக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின், பேராசிரியர் அன்பழகன், துரைமுருகன் ஆகியோர்!
Tamil Nadu, DMK Executive Committee Meeting LIVE Updates: திமுக செயற்குழு கூட்டம்
2:15 PM: கே.என்.நேரு பேசுகையில், ஒரு கோடி தொண்டர்களும் ஸ்டாலின் பக்கம் இருப்பதாக பேசினார். மொத்தத்தில் மு.க.ஸ்டாலின் தலைமை மீது மொத்த கட்சியும் நம்பிக்கை கொண்டிருப்பதை இந்த செயற்குழு உறுதிப் படுத்தியது. அழகிரி தனது பேட்டிகளால் மீடியாவில் சலசலப்பைக் கிளப்பினாலும், கட்சி அமைப்புகளில் அதற்கு ஆதரவு இல்லை என்பதும் உறுதி ஆகியிருக்கிறது.
1:35 PM: கூட்டம் முடிந்த பிறகு திமுக செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் கூறுகையில், ‘காலம் வரும்போது பொதுக்குழு கூடி தலைவரை தேர்வு செய்யும். திமுகவை உடைக்க யாருக்கும் வலிமை கிடையாது. அடுத்தவர்களின் சதிக்கும் தொண்டர்கள் உடன்படமாட்டார்கள். திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கவே செயற்குழு கூட்டம் நடைபெற்றது.’ என்றார்.
1:25 PM: திமுக தலைவர் கருணாநிதி வழிநின்று நமது கடமையை செய்வோம். அவரது எண்ணங்களை நிறைவேற்ற உறுதி ஏற்போம்: மு.க.ஸ்டாலின் உருக்கம்
1:15 PM: அண்ணாவின் பக்கத்தில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதே கலைஞரின் ஆசை. அவரின் ஆசையை நிறைவேற்ற எதையும் இழக்க தயார் என கூறி முதல்வரை சந்தித்தேன்- மு.க.ஸ்டாலின்
1:00 PM: மு.க.ஸ்டாலின் மேலும் பேசுகையில், ‘மானம் மரியாதை கவுரவம் எது போனாலும் பரவாயில்லை என சென்று முதல்வரை சந்தித்து தலைவர் கலைஞக்கு மெரினாவில் இடம் வேண்டும் என முதல்வரின் கையை பிடித்து கெஞ்சி கேட்டேன். ஆனால் மறுத்து விட்டார்கள்’ என உருக்கமுடன் குறிப்பிட்டார்.
12:45 PM: மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பேசுகையில், ‘நீங்களெல்லாம் தலைவரை இழந்திருக்கிறீர்கள். நான் தலைவரை மட்டுமல்ல, தந்தையையும் இழந்து நின்று கொண்டிருக்கிறேன்.’ என்றார்.
12:30 PM: திமுக செயற்குழுவில் மு.க.ஸ்டாலின் தனது பேச்சை, ‘என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே!’ என கருணாநிதியின் வாசகத்துடன் தொடங்கினார்.
Tamil Nadu, DMK Executive Committee Meeting: திமுக செயற்குழுக் கூட்டத்தில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டபோது!
12:20 PM: திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் கூறுகையில், ‘பொது வாழ்வில் எப்படி வாழ வேண்டும் என்பதை எனக்கு திமுக தலைவர் கருணாநிதி கற்பித்தார். சுய மரியாதையுடன் இருக்க வேண்டும் என்பார் திமுக தலைவர் கருணாநிதி. எம்.ஜி.ஆருடன் நான் நெருக்கமாக இருந்தாலும் திமுக தலைவர் கருணாநிதியை பிரியவில்லை’ என குறிப்பிட்டார்.
12:00 PM : திமுக.வின் மற்றொரு துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் பேசுகையில், ‘மத்திய அரசு திமுகவில் பிளவு ஏற்படுத்துவதற்கும், ஒழிப்பதற்கும் முயற்சித்து வருகிறது’ என்றார்.
11:45 AM : ‘பெரியார், அண்ணா, கருணாநிதி என அனைத்தும் இனிமேல் ஸ்டாலின் தான்’ என துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி குறிப்பிட்டார்.
11:30 AM: கூட்டத்தில் சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெ.அன்பழகன் பேசுகையில், ‘ஸ்டாலின் தலைவராக வரப்போகிறவர். திமுக தலைவர் கருணாநிதியை ஸ்டாலின் மூலம் பார்க்கப்போகிறோம். நமக்கு எதிராக செயல்படும் அந்த உறவை நேரடியாக செயல் தலைவர் ஸ்டாலின் துண்டிக்க வேண்டும். எதிர்ப்பு தெரிவிப்பவர்களை கண்டிக்க வேண்டும்’ என குறிப்பிட்டார்.
Tamil Nadu, DMK Executive Committee Meeting: திமுக செயற்குழுக் கூட்டத்திற்கு மு.க.ஸ்டாலின் வந்தபோது!
11:25 AM: ‘மகளிருக்கு உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவிகித இட ஒதுக்கீடு அளித்தவர் திமுக தலைவர் கருணாநிதி. ஈழத் தமிழர்களின் உரிமைக்காக 1956 முதலே குரல் கொடுத்து வந்தவர்.’ என கருணாநிதி குறித்து தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டது.
11:15 AM : ‘கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு தொடர முனைப்பு காட்டியவர் கருணாநிதி. சுதந்திர தினத்தன்று மாநில முதல்வர்கள் தேசியக் கொடியேற்றும் உரிமையை பெற்றுத்தந்தவர்; பெண்களுக்கு சொத்துரிமை கிடைக்க நடவடிக்கை எடுத்தவர்’ என கருணாநிதிக்கு புகழாரம் சூட்டப்பட்டது.
11:00 AM : ‘பொதுவாழ்வில் ஈடுபடுவோர் பின்பற்றக்கூடிய பல்கலைக்கழகம் திமுக தலைவர் கருணாநிதி. கை ரிக்ஷா ஒழிப்பு, குடிசை மாற்று வாரியம், உழவர் சந்தை, நமக்கு நாமே திட்டம் தந்தவர் அவர்’ என தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டது.
10:30 AM : திமுக செயற்குழு தொடங்கியதும் கருணாநிதியின் உருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்திவிட்டு, கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. கருணாநிதியின் சாதனைகள் அதில் பட்டியல் இடப்பட்டன.
9:30 AM : கருணாநிதியின் சமாதிக்கு அஞ்சலி செலுத்திவிட்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்த அழகிரி ‘தமிழகத்தில் கருணாநிதியின் உண்மையான விசுவாசமுள்ள உடன்பிறப்புகள் எல்லோரும் என் பக்கம் தான் உள்ளார்கள்’ என்று கூறியிருப்பது திமுக வட்டத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அழகிரியின் வரவு குறித்தும் திமுக செயற்குழு கூட்டத்தில் பேசப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.