Kanal Kannan anticipatory bail plea dismissed in Periyar statue case: பெரியார் சிலை குறித்து சர்ச்சை கருத்துக்கள் கூறிய கனல் கண்ணன் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், கனல் கண்ணன் கைதாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்துகள் உரிமை மீட்பு என்ற பெயரில் தமிழகம் முழுவதும் இந்து முன்னணி சார்பில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பிரச்சாரத்தின் தொடக்க விழா சென்னை மதுரவாயல் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற சினிமா நடிகரும் ஸ்டண்ட் கலைஞருமான கனல் கண்ணன் பேசுகையில், திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தினசரி லடசக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் கோவிலுக்கு உள்ளே செல்லும் வழியில் கடவுள் இல்லை என்று சொன்னவரின் (பெரியார்) சிலை உள்ளது. இந்த சிலை என்றைக்கு உடைக்கப்படுகிறதோ அப்போது தான் இந்துக்களின் எழுச்சி நாள் என்று கூறியிருந்தார்.
கனல் கண்ணனின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை தொடருக்கு அவருக்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியது. மேலும் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில், கனல் கண்ணனை கைது செய்ய கோரி, சென்னை மாநகராக காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில், பொது அமைதியை சீர்குலைத்தல் சட்டப்பிரிவுகளின் கீழ் கனல் கண்ணன் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு கனல் கண்ணன், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் கனல் கண்ணன் தரப்பில், சிலையை உடைக்கப் போவதாகக் கூறவில்லை. சிலையை அகற்ற வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. மனுதாரர் வேறு எந்த குற்றமும் செய்யவில்லை என்று வாதிடப்பட்டது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மாநகர குற்றவியல் அரசு வக்கீல் ஜி.தேவராஜன், மனுதாரர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அவருக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது என வாதிட்டார். இருதரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனால் கனல் கண்ணன் கைதாக வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil