போராட்டம் மூலம் நீதிமன்றத்துக்கு நெருக்கடி கொடுக்கலாம் என்று நினைப்பது தவறு என கேன் குடிநீர் ஆலைகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Advertisment
சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கும் குடிநீர் உற்பத்தி அலைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை புழலை சேர்ந்த சிவமுத்து என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ்குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்த போது, சட்டவிரோத குடிநீர் அலைகள் மீது மாவட்ட ஆட்சியர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவிட்டால் தமிழக அரசின் தலைமை செயலாளரையும் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் எனவும் நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.
Advertisment
Advertisements
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ்குமார் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், அனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை மூடியது குறித்து அறிக்கை தாக்கல் செய்தார்.
அதில் தமிழகம் முழுவதும் மொத்தம் 650 குடிநீர் ஆலைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
சீல் வைக்கப்பட்ட இந்த ஆலைகளுக்கான மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்த அவர், உரிமத்தை புதுப்பிக்கக் கோரி 116 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக குறிப்பிட்டார்.
இந்த விண்ணப்பங்களை பரிசீலிக்கும் போது, தண்ணீர் அளவிடும் கருவி பொருத்தப்பட்டுள்ளதா, மழைநீர் சேகரிப்பு வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து உரிமத்தை புதுப்பிக்கப்படும் எனவும், அதற்கு கட்டணமாக 6000 ரூபாய் வசூலிக்க இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
அப்போது நீதிபதிகள் போராட்டம் மூலம் நீதிமன்றத்துக்கு நெருக்கடி கொடுக்கலாம் என்று நினைப்பது தவறு என கேன் குடிநீர் ஆலைகளுக்கு நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளது. குடிநீர் ஆலைகள் கடந்த காலங்களில் செய்த சட்டவிரோத செயல்களுக்கு உரிய விலையைக் கொடுக்க வேண்டாமா? என கேள்வி எழுப்பினர்.
நிலத்தடியில் இருந்து தண்ணீர் எடுக்கும் அளவிற்கு ஏற்ப குடிநீர் நிறுவனங்களுக்கு ஏன் கட்டணம் வசூலிக்க கூடாது? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் மாநிலத்தின் இயற்கை வளமான தண்ணீரை இலவசமாக எடுக்க அனுமதிப்பது ஆச்சர்யம் அளிக்கிறது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
இதற்கு பதில் அளித்த குடிநீர் ஆலைகள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், ஏற்கனவே மூடப்பட்ட ஆலைகளால் குடிநீர் உற்பத்தி செய்து வழங்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டதே தவிர, வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக தெரிவிக்கவில்லை எனவும், ஆலைகள் மூடி இருக்கும்போது எப்படி வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடியும் என்றும் தெரிவித்தார்.
பல்வேறு அமைப்புகளில் அனுமதியை பெற்ற இந்த ஆலைகள் இயங்கி வருவதாக குறிப்பிட்ட அவர், தமிழகம் முழுவதும் உள்ள தொழிற்சாலைகள் எடுக்கும் நிலத்தடி நீரில் ஒரு சதவீத அளவே இந்த குடிநீர் உற்பத்தியாளர்கள் எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆனால், பல ஆண்டுகளாக சட்ட விரோதமாக தண்ணீர் எடுத்து வரும் இந்த ஆலைகள் கடந்த காலங்களில் செய்த சட்டவிரோத செயல்களுக்கு உரிய விலையைக் கொடுக்க வேண்டாமா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும் குடிநீர் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக பத்திரிகைகளின் வாயிலாக அறிந்தேன் போராட்டம் மூலமாக நீதிமன்றத்திற்கு நெருக்கடி கொடுக்கலாம் என நினைத்தால் அது தவறு என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.
அனுமதியின்றி செயல்படக்கூடிய குடிநீர் ஆலைகளை சீல் வைத்ததை ஆய்வு செய்வதற்கு சுதந்திரமான ஒரு குழுவை அமைக்கக் வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
முறையாக உரிமம் பெற்று செயல்படும் ஆலைகளுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என தெரிவித்த நீதிபதிகள், அரசின் கவனத்திற்கு தெரியாமல் இயற்கை வளம் சுரண்டப்படுகிறது. அதை நீதிமன்றம் கவனத்தில் எடுத்துள்ளது என குறிப்பிட்டார்.
இதனையடுத்து மூடப்பட்ட ஆலைகளை தற்காலிகமாக இயங்க அனுமதிப்பது தொடர்பாக நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்து நாளை விசாரணை தள்ளிவைத்தனர்.